Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
கமலின் கட்சியில் உள்ள பெண்களில் ஒருவர் கவிஞர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இறுதியில் ஆண்கள் தங்கள் சகோதரர்கள், மாமாக்கள், அப்பாக்கள், வழிகாட்டிகளுக்கு மட்டுமே ஆதரவாக நிற்பார்கள் என சின்மயி கூறினார்.

இலக்கிய துறையில் உயரிய விருதான ஞான பீட விருதுக்கு தேர்வாகியுள்ள கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை பிரபல பின்னணி பாடகி கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “நெடிய பரம்பரை கொண்ட தமிழிலக்கியத்துக்கு மூன்றாவது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்துள்ளது. ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞானபீடத்துக்குப் பிறகு, கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்தப் பெரும்பெருமையைச் சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் கவிப்பேரரசு வைரமுத்து 'வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்' என்கிற கவிச் சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார்.
இதனை குறிப்பிட்டு பதிலளித்த சின்மயி, “சினிமாவில் அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் அரசியலுக்கு மாறும்போது, தாங்கள் இவரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டோம் என்று பகிரங்கமாக வாக்குமூலம் அளிக்கும் பெண்களைக் கண்டும் காணாமல் முழுமையாகப் புறக்கணிப்பதை பார்க்கும்போது வாக்களிக்கும் பெண்களுக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்த வேண்டும். ஆண்கள் ஒருபோதும் நம் பக்கம் இருக்கப்போவதில்லை.
இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், அவரது சொந்தக் கட்சியில் உள்ள பெண்களில் ஒருவர் கவிஞர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார். எனினும் இறுதியில், ஆண்கள் தங்கள் சகோதரர்கள், மாமாக்கள், அப்பாக்கள், நண்பர்கள், வழிகாட்டிகளுக்கு மட்டுமே ஆதரவாக நிற்பார்கள். ஆனால் மனவேதனைக்குள்ளான பல பெண்களைப் பற்றி யார் கவலைப்படுவார்கள்?" என கடுமையாக சாடியுள்ளார். சின்மயியின் இந்த பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
சின்மயி வெளியிட்ட மற்றொரு பதிவில், “2018 ஆம் ஆண்டில், பல்வேறு வயதுடைய பல பெண்கள் பாடலாசிரியரைத் தங்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்தவராக அடையாளம் காட்டினர். ஜெயகாந்தன் போன்ற ஒருவருக்குப் பிறகு, இன்று அந்த நபருக்கு ஞானபீட விருது வழங்கப்படுகிறது; அதே ஜெயகாந்தன் தன்னை 'புகழ்ந்து' எழுதியதாக வைரமுத்து சமர்ப்பித்த ஒரு கடிதம் போலியானது என ஜெயகாந்தனின் மகளே அம்பலப்படுத்திய பிறகும் இது நடக்கிறது.
கேரளாவிலிருந்து ஒரு குழு அவருக்கு ஓ.என்.வி. குருப் விருதை அறிவித்தது; ஆனால், ஓ.என்.வி. குருப் அவர்களின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்கு எதிராக அந்தச் சமூகத்திலிருந்து நீதிக்கான குரல்கள் எழுந்ததால், பின்னர் அந்த விருது 'திரும்பப் பெறப்பட்டது'. அவரைக் குற்றம் சாட்டிய அந்தப் பெண்களின் ஒட்டுமொத்தக் குரல்களும் ஒடுக்கப்பட்டன. இதற்காக நான் மிகப் பெரிய விலையைக் கொடுத்தேன். தங்கள் கனவுகளைத் துறந்து வெளியேறிய மற்றப் பெண்கள் என்னைப் போலப் பாதி அளவு கூட அதிர்ஷ்டசாலிகள் இல்லை” என சின்மயி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















