சென்னையில் விரைவில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்.. வந்தது செம்ம அப்டேட்!
சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது.
அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்கான பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. மேலும், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஓட்டுநர் இல்லா ரயில்: இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநர் இல்லா ரயில்களையும் அறிமுகப்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாக முடிவெடுத்தது. அதன்படி, 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, ஓட்டுநர் இல்லா ரயில்களை தயாரிக்க ரூ. 1215.92 கோடி ரூபாயில் ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில் 3 பெட்டிகள் கொண்ட 36 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த நிலையில், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 108 ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்காக அல்ஸ்டோம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த பிப்ரவரி மாதம், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் உற்பத்தி தொடங்கியது.
ஓட்டுநர் இல்லா ரயில் பெட்டியில் குளிரூட்டப்பட்ட சூழல், பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்தேய இடங்களுடன் சிறப்பு வசதி உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு கைப்பிடிகளும், பெண்களின் பகுதியை வேறுபடுத்த கைப்பிடிகளில் வெவ்வேறு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சிறப்பு வசதிகள் என்னென்ன? அவசரகால வெளியேற்ற கதவுகள், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் தடைகளை கண்டறியும் கருவிகள், ரயில்களில் ஆற்றல் திறனுக்காக மீளுருவாக்கம் செய்யக்கூடிய பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பயணிகள் சரியான இடத்தில் இறங்குவதற்கு ஏதுவாக, எல்சிடி திரைகளில் வரைபடங்களுடன் வழிக்காட்டுதல்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, இந்த ஓட்டுநர் இல்லா மெட்ரோ இரயில்கள் நகர்ப்புற போக்குவரத்தில் ஒரு புதிய தரநிலையை அமைத்து, வசதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை இணைக்கும் என்று மெட்ரோ ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















