மேலும் அறிய

நான்… ராஜா சார்… அப்புறம் அந்த வாழைப்பழம்! இசைஞானியின் இந்த முகம் தெரியுமா!

‛சார்…. நல்லா இருக்கீங்களா…’ என வார்த்தை வந்ததும்… முதல் நாள் நடந்த பிரஸ்மீட், கண் முன் வந்து போனது, அப்படியே நிறுத்தி, ‛சார்… சாப்பிட்டீங்களா… தொந்தரவு பண்ணிட்டேனா…’ என்றேன். ‛ச்சே ச்சே அதெல்லாம் இல்ல…’ என, கூலாக பேச ஆரம்பித்தார் இளையராஜா!

மலேசியாவில் ‛கிங் ஆப் கிங்’ என்கிற இசை நிகழ்ச்சியை இளையராஜவை வைத்து நடத்த திட்டமிட்டார் அவரது மகன் கார்த்திக் ராஜா. அதற்கான ஒத்திகைகள் தயாராகிக்கொண்டிருந்தது. திடீரென உடல்நலக்குறைவு காரணமாக இளையராஜா சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இசை உலகமே அதிர்ந்தது. வழிபட்டது, வேண்டியது, தவமிருந்தது. மீண்டு வந்தார் ராஜா. வந்ததும் அவர் எடுத்த முதல் முடிவு,மலேசியாவில் நடத்த விருந்த இசை நிகழ்ச்சியை மதுரையில் நடத்த வேண்டும் என்பது தான். இசை பயணத்தை துவக்கிய இளையராஜாவிற்கு தேனி பண்ணைபுரம் எப்படி முகவரியோ, அப்படி தான் மதுரையும். வாய்ப்புகளை தேடி அவர் அலைந்த காலத்தில் மதுரையில் அவர் காலடி படாத தெருக்களே இல்லை என்பார்கள். தன் மண்சார்ந்த மக்களுக்கு விருந்தளிக்க விரும்பினார் இளையராஜா. அதற்கான தேர்வு தான் மதுரை. அதுமட்டுமின்றி  அதிலிருந்து கிடைக்கும் தொகையில் பண்ணைப்பட்டிக்கு வசதி செய்து வருவதும் நோக்கமாக இருந்தது.

2014 ஏப்ரல் 5ம் தேதி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக தயாரானது. நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு மீண்ட இளையராஜா, மதுரை வந்தடைந்தார். பசுமலையில் மலை மீது உள்ள பிரபல ஓட்டலில் தங்கியிருந்தார் இளையராஜா. அப்போது பிரபல அச்சு ஊடகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு, இளையராஜாவின் நிகழ்ச்சியை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. முதல் நாளே இளையராஜாவின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு. நீண்ட நாட்களாக செவி வழியே கேட்டு மகிழ்ந்த ராஜாவை, முதன் முதலாக பார்க்கப் போகிறோம் என்கிற பூரிப்பு.


நான்… ராஜா சார்… அப்புறம் அந்த வாழைப்பழம்! இசைஞானியின் இந்த முகம் தெரியுமா!

பொதுவாகவே அந்த விடுதிக்குள் அந்நியர்கள் செல்ல முடியாது. ராஜா வேறு இருக்கிறார். ஏக கெடுபிடி. அனைத்தையும் கடந்து, அவர்கள் அனுமதியோடு செய்தியாளர்கள் எல்லாம் வந்து சேர்ந்தார்கள். அதே வெள்ளை ஆடையோடு வந்தமர்ந்தார் ராஜா. என்னைப் போலவே பலரும் அதே பூரிப்போடு அவரை அணுகினர். மூத்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர், முதல் கேள்வியை துவக்கும் முன்பு, ‛சார்… நல்லாயிருக்கீங்களா…’ என்று தான் கேட்டார்… அவ்வளவு தான், ‛ஏன்… என்னை பார்த்தால் ஆஸ்பத்திரியில் இருக்கிற மாதிரி இருக்கா…’ என, கொதித்து விட்டார் ராஜா. எங்கள் எல்லாருக்கும் ஒரு விதமான அதிர்ச்சி. வழக்கமாக பரஸ்பரம் நலம் விசாரிப்பது நம் மரபு தானே. அதில் என்ன பிரச்னை. ஏன் டென்ஷன் ஆகிறார் என்று. ஒரு வழியாக அவரையும், அந்த பத்திரிக்கையாளரையும் ஏற்பாட்டாளர்கள் சமரசம் செய்து, அடுத்தடுத்து செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தனர். ஆனாலும் நான் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சி விலகவில்லை. ‛என்னடா… நாம ஒன்று நெனச்சு வந்தோம்… இங்கே வேறு மாதிரி இருக்கே,’ என்பது தான் அது. அப்போது தான் அவரது மகன் கார்த்திக் ராஜா வந்து பேசினார். ‛யாரும் தப்பா நினைக்காதீங்க… அப்பா ஆஸ்பிட்டலில் இருந்து நேரா இங்கே தான் வர்றார். உங்கள் ஆசி தான் அவரை மீட்டு வந்திருக்கிறது. அவர் தனக்குள் இருக்கும் நோயை மறக்க விரும்புகிறார். அதை நினைவூட்டுவதை தவிர்க்க விரும்புகிறார். தான் நன்றாக இருக்கிறேன் என நம்புகிறார்…’ என்று கூறினார். அவர் கூறியதில் இருந்த உண்மை புரிந்தது. அனைவரும் புறப்பட்டோம்.


நான்… ராஜா சார்… அப்புறம் அந்த வாழைப்பழம்! இசைஞானியின் இந்த முகம் தெரியுமா!

அடுத்த நாள், மதியம் அலுவலகத்தில் செய்தி ஆசிரியரிடமிருந்து அழைப்பு, ‛ஸ்டாலின்… இளையராஜா கூட இண்டர்வியூ… நீங்க தன் எடுக்கப் போறீங்க…’ என, ஷாக் கொடுத்தார். ராஜாவின் ரசிகன் நான் என்பது அவருக்கு தெரியும். அவர் என்னை பெருமைபடுத்தவே அந்த பணியை தந்தார். ஆனால் எனக்கோ நடுங்கிவிட்டது. முதல் நாள் பிரஸ்மீட்டில் நடந்ததெல்லாம் கண் முன் வந்து சென்றது. அவரிடம் கூற முடியாதே! போதாக்குறைக்கு, இணையத்திற்கு வீடியோ பதிவாகவும் எடுக்க வேண்டும் என்கிற உத்தரவு. ‛சரி தான்…’ என, மனதை திடமாக்கிக் கொண்டு அதே விடுதிக்கு புறப்பட்டோம். வழக்கமான விடுதியின் கெடுபிடிகளை தாண்டி மலையேறினோம். அங்குள்ள வளாகத்தில் உள்ள மயில்களுடன் தன் குடும்பத்தாருடன் விளையாடிக்கொண்டிருந்தார் கார்த்திக் ராஜா. அவரிடம் விபரத்தை கூறினோம். ‛வாங்க… அப்பா உங்களுக்குத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்காரு… அந்த ரூமுக்கு போங்க…’ என, ஒரு அறை எண்ணை தந்தார். அந்த அறை தான் இளையராஜாவின் பேவரிட் அறை என பிறகுதெரிந்தது. அறையை நெருங்கினோம். பூட்டிய கதவை தட்டலாமா? என்ன மூடில் இருக்கிறார் எனத்தெரியவில்லையே? என பல குழப்பங்களுடன் கதவுக்கு முன் சில நிமிடங்கள் காத்திருந்தோம். ‛பொறுத்தது போதும் என்பது போல….’ என்னுடன் வந்த கேமரா மேன், பின்னால் இருந்தபடி கதவை தட்டிவிட்டார். ‛என்னங்க பண்ணீங்க…’ என, அவரை திரும்பி பார்க்க முயன்ற மாத்திரத்தில், கதவு திறக்கும் சத்தம். அவரே தான். அதே வெள்ளை உடை. வெள்ளை செருப்பு. ஆனால் சிரித்த முகம். ‛ம்… சொல்லுங்க…’ என்றார். நாளிதழ் பெயரைச் சொல்லி வந்ததற்கான காரணத்தை கூறியதும், ‛வாங்க… வாங்க…’ என , அன்போடு அழைத்தார். ‛எங்கே உட்காரலாம்…’ என அவரே லோகேஷன் தேடினார். அங்கிருந்த டைனிங் டேபிளை தவிர பொருத்தமான இடமில்லை. ஆனால், அங்கு அவர் உண்டு கொண்டிருந்த வாழைப்பழத்தின் பாதியும், உண்ணவிருந்த மீதியும் இருந்தது. அதை அவரே ஒழுங்குபடுத்தினார்.


நான்… ராஜா சார்… அப்புறம் அந்த வாழைப்பழம்! இசைஞானியின் இந்த முகம் தெரியுமா!

அதுவரை அவரிடம் எதுவும் பேசவில்லை. இப்போது பேசலாம் என தோன்றியது. ‛சார்…. நல்லா இருக்கீங்களா…’ என வார்த்தை வந்ததும்… முதல் நாள் நடந்த பிரஸ்மீட் கண் முன் வந்து போனது, அப்படியே நிறுத்தி, ‛சார்… சாப்பிட்டீங்களா… தொந்தரவு பண்ணிட்டேனா…’ என்றேன். ‛ச்சே ச்சே அதெல்லாம் இல்ல…’ என, கூலாக பேசினார். ‛நீங்க சாப்பிடீங்களா…’ என்றவர், ‛இந்த நேரத்தில் எப்படி சாப்பிட்ருப்பீங்க…’ என , ஒரு வாழைப்பழத்தை கொடுத்தார். முதல் மீட், ‛நான்… ராஜா சார்… வாழைப்பழம்…’ எப்படி இருந்திருக்கும். இப்போது, அவரிடம் எப்படி பேச வேண்டும் என்கிற அடிப்படை புரிந்து விட்டது. வீண் உபசரிப்புகளை அவர் விரும்புவதில்லை. மொத்தமே 5 கேள்வி தான் எடுத்து வந்திருந்தேன். அதற்கு பதில் வாங்கினாலே(எந்த மனகசப்பும் இல்லாமல்) நான் பாஸ் என்கிற எண்ணம் மட்டும் இருந்தது. அவற்றை கேள்விகளாக கேட்காமல், அவரது நினைவுகளாக்கினேன். மனிதர், நினைவுகளோடு கலந்தார் அப்போது. குறிப்பாக, ‛பண்ணைபுரம் மக்களுக்கு நிகழ்ச்சியில் சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்,’ எப்படி பீல் பண்றீங்க என கேட்டதும், அவரை அறியாமல் ஒரு வித மகிழ்ச்சி. மனிதர் சிரித்தார். அதன் பின் எல்லாம் சிரித்த முகம் தான்.

63-வது பிறந்தநாளில் ஹீரோ! கமர்ஷியல் சினிமாவின் ‛காக்டெயில்’ கே.எஸ்.ரவிக்குமார்!

இசையை பற்றி பேசினார். இசையோடு தன் உறவை பேசினார். உறவோடு தன் வாழ்வை பேசினார். மொத்தத்தில் அவர் பேசினார். நாங்கள் மிதந்து கொண்டிருந்தோம். கேமராவும் மகிழ்வோடு அதை பதிவு செய்து கொண்டிருந்தது. நினைத்ததை விட சிறப்பான பேட்டி. அதுவும் இளையராஜாவுடன், தனியாக! கடிகாரத்தை பார்த்தால் 40 நிமிடங்களுக்கு மேல் ஆகியிருந்தது. தனி அறையில், அவருடன் இருந்த 40 நிமிடங்களில், அவரது உடை, உணவு, பழக்க வழக்கம் அனைத்தையும் ஓரளவிற்கு அறிய முடிந்தது. மிக எளிமையான வாழ்க்கை. அளவான உணவு, இயற்கையோடு ஒன்றிய ரசனை. அந்த அறையிலிருந்து பார்த்தால், மதுரையின் மொத்த அழகும் தெரியும். அத்தோடு விடுதி இருக்கும் மலையின் இயற்கையையும் ரசிக்கலாம். மயில்கள், அறை தேடி வரும். இவை தான் அந்த அறையை ராஜா விரும்ப காரணம் என்பது பின்னால் தெரிந்தது. பேட்டி முடிந்ததும், ‛எப்போ வரும்… எப்படி வரும்… எதில் வரும்…’ என்றெல்லாம் ஆர்வமாய் கேட்டார். இதெல்லாம் அதற்கு முன் அவர் யாரிடமும் கேட்டதில்லை என்றார்கள், வெளியில் இருந்த ஏற்பாட்டாளர்கள். அவருக்கென உதவியாளர் கூட அறையில் இல்லை. அவரே அனைத்தையும் செய்து கொள்கிறார். தான் உண்டு, தான் வேலை உண்டு என்பார்களே… அதே தான். பேட்டி முடிந்ததும், அவரே கதவை திறந்து வழியனுப்பினார். வெளியே செல்லும் முன் நான் தேடியது ஒன்று தான். ‛எங்கே அந்த ஆர்மோனியம்…!’. ராஜாவின் மகுடமல்லவா அது. அதுவும் தூரத்தில் அழகாய் அமர்ந்திருந்தது. அதன் அருகில் சில தெய்வங்களின் போட்டோக்கள். ராஜாவின் தெய்வத்தை தரிசித்துவிட்டு, நகர்ந்தோம்.

ஒரு ரசிகனா என்னோடு அனுபவம், பழசா இருக்கலாம். ஆனால் ஒரு செய்தியாளரா என்னோட இந்த அனுபவம், கண்டிப்பா புதுசா தான் இருக்கும்னு நினைக்கிறேன். பத்திரிக்கையாளர் யாரும் இந்த அளவிற்கு அவருடன் நேரத்தை செலவிட்டிருக்க வாய்ப்பு குறைவு. இந்த நிகழ்வை கூட அவர் நினைவில் வைத்திருக்க வாய்ப்பில்லை. இது போன்ற பல நினைவுகளை அவர் சுமந்திருப்பார். ஆனால், நான் கண்ட அந்த தருணங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். நினைத்தது போலவே பெரிய ஹிட் அந்த இசை நிகழ்ச்சி! இன்றும் அந்த நினைவலைகள் நெஞ்சில் நிழலாடுகிறது. ‛புது ராகம் படைப்பதாலே… நானும் இறைவனே…’ என்கிற வரிகள் அவரை தவிர யாருக்கும் பொருந்தும். 2014ல் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வேண்டுதலில் பூரண குணம் பெற்று திரும்பிய இளையராஜாவே, ‛உன்ன நெனச்சு.. நெனச்சு…. உருகிப்போனோம்! உருகிப்போவோம்! இத்தனை ஆண்டு பரிசுத்தமான இசை வாழ்வில் எந்த விமர்சனத்திலும் சிக்காதவர் இளையராஜா. மற்றபடி கோபமெல்லாம் மனிதனுக்குரியவை தான். அதை கடந்து அந்த பலாப்பழத்தை திறந்தால், சுளை சுவை தானே! 78 வது வயதில் இன்று அடியெடுத்து வைக்கும் இசைஞானியே இன்று போல் என்றும் இனிமை தருக!

55 ஆண்டுகளுக்கு முன் ஊடக அறம் பேசிய எம்.ஜி.ஆர்.,! ஏன் உதயமானது சந்திரோதயம்?

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Thalapathy Vijay: “நியாயம் ஜெயிக்கும்.. நாங்கள் உன் பக்கம்” - விவகாரத்து வழக்கில் விஜய்க்கு பிரபலங்கள் ஆதரவு!
Thalapathy Vijay: “நியாயம் ஜெயிக்கும்.. நாங்கள் உன் பக்கம்” - விவகாரத்து வழக்கில் விஜய்க்கு பிரபலங்கள் ஆதரவு!
இரண்டாவது அத்தியாயத்தை துவங்கியுள்ளேன்..வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாச்சார விழாவில் நடிகர் தனுஷ்
இரண்டாவது அத்தியாயத்தை துவங்கியுள்ளேன்..வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாச்சார விழாவில் நடிகர் தனுஷ்
மாஸ் ஹீரோ வேணாம் நல்ல மனசு இருந்தால் போதும்...நடிகர் விமல் ஓப்பன் டாக்
மாஸ் ஹீரோ வேணாம் நல்ல மனசு இருந்தால் போதும்...நடிகர் விமல் ஓப்பன் டாக்
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
Embed widget