ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
விராலிமலையின் செல்லப்பிள்ளை என அழைக்கப்படும் அளவுக்கு அந்த தொகுதி மக்களிடையே செல்வாக்கு மிக்கவராக விஜயபாஸ்கர் திகழ்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏபிபி நாடுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

தொடர்ச்சியாக ஒரே தொகுதியில் 4 முறை வெற்றி பெறுவது எளிதான காரியமல்ல என விராலிமலை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் ஏபிபி நாடுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
விராலிமலையின் செல்லப்பிள்ளை
2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். அடிப்படையில் மருத்துவரான இவர் அதிமுக ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்டு மக்களிடையே பாராட்டைப் பெற்றவர். குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் இவர் தலைமையிலான சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு மக்களிடையே நன்மதிப்பை பெற்றது.
இப்படியான விஜயபாஸ்கர் 2001ம் ஆண்டு முதல்முறையாக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் 2011,2016,2021 ஆகிய 3 சட்டமன்ற தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். விராலிமலையின் செல்லப்பிள்ளை என அழைக்கப்படும் அளவுக்கு அந்த தொகுதி மக்களிடையே செல்வாக்கு மிக்கவராக விஜயபாஸ்கர் திகழ்கிறார். இவர் நமது ஏபிபி நாடு சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
தினசரி பணிகளை மேற்கொள்வதில் உள்ள சிரமம்
அதில், “என்னுடைய ஒருநாளின் காலை 6.30 மணிக்கு தொடங்கும். என்னை எழுப்புபவர்கள் யார் வந்திருக்கிறார்கள் என்று சொல்லி தான் எழுப்புவார்கள். நான் என்னுடைய பிஸியான அட்டவணையில் தினசரி பணிகளை மேற்கொள்வது மிக கடினமாக உள்ளது. கடந்த ஜனவரி 28ம் தேதி வந்த முகூர்த்த தினத்தில் எனக்கு கிட்டதட்ட 78 சுப நிகழ்வுகளுக்கான அழைப்புகள் வந்தது. எனக்கு அத்தனை நிகழ்வுகளையும் பங்கேற்று சிறப்பிக்க 3 நாட்களானது. அரசியலை விட கடினமான பயணம் என்பது கிடையாது. ஏற்றுக்கொண்ட பாதையை நினைக்கும்போது சுகமாக இருக்கும்” என விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
ஒரே தொகுதியில் தொடர் வெற்றி எளிதானல்ல
தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் அனுபவம் பற்றி பேசிய அவர், “2001 சட்டமன்ற தேர்தலில் நான் முதல்முறையாக நின்றேன். அப்போது ஜெயலலிதா, இரட்டை இலை சின்னம் தான் அடையாளமாக இருந்தது. அதனால் எனக்கு வெற்றி கிடைத்தது. அதன்பிறகு ஒரே சட்டமன்ற தொகுதியில் 4 முறை வெற்றி பெறுவது என்பது மிக கடினமானது. அதற்கு அர்ப்பணிப்பு ரொம்ப முக்கியமானது. கடின உழைப்பு, மக்களுடனான தொடர்பும் இருந்தால் தான் வெற்றி பெற முடியும்.
விஜயபாஸ்கர் பற்றி ஏ டூ இசட் இந்த மக்களுக்கு தெரியும். ஒரே சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 4 முறை போட்டியிடுவது என்பது அசாத்தியமான தைரியம் தான். தொடர் வெற்றியும் சாதாரணமானது இல்லை. விஜய பாஸ்கரிடம் ஒரு விஷயம் கேட்டு சென்றால் எதையும் தாமதப்படுத்தாமல் உடனடியாக செய்வார் என்பதும், அவரால் முடியாது என்றால் யாராலும் முடியாது என்பது என் தொகுதி மக்களுக்கு தெரியும்.
ஒரே தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு காரணம் மக்கள் பிரதிநிதியாக எங்களின் கடின உழைப்பு உள்ளது. இந்த தொகுதி மக்கள் என் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சில நேரங்களில் மக்கள் பிரச்னையை தீர்த்து வைப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். ஆனால் அவை எதிர்ப்பாக மாறாது. எங்கேயே ஒரு சிக்கல் இருக்கிறது, அதனால் தான் விஜயபாஸ்கரால் தீர்க்க முடியவில்லை என்பது அவர்களுக்கு தெரியும்” என விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.





















