C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
கடந்த 15 ஆண்டுகளில் விராலிமலை தொகுதியில் நான் மக்களுக்காக செய்த திட்டங்கள் ஏராளம் என அத்தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., விஜய பாஸ்கர் ஏபிபி நாடுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர், இதுவரை தனது தொகுதியில் கொண்டு வந்த திட்டங்கள் பற்றி ஏபிபி நாடுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதுவரை செய்தது என்ன?
அந்த நேர்காணலில் பேசிய அவர், “கடந்த 15 ஆண்டுகளில் விராலிமலை தொகுதியில் நான் குடிநீர் விஷயத்தில் இருந்த பிரச்னையை தீர்த்துள்ளேன். இந்த சட்டமன்ற தொகுதியில் 86 பஞ்சாயத்து உள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்கு குடிநீர் என்றால் ஒன்று நிலத்தடி நீர், இல்லாவிட்டால் குளத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் சூழல் இருந்தது. ஆனால் முதல்முறையாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை ரூ.350 கோடி செலவில், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இரண்டு வழிகளில் அந்த தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அம்மா இருந்த காலக்கட்டத்தில் அந்த திட்டத்துக்கு ஒப்புதல் வாங்கி பணிகள் நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி காலக்கட்டத்தில் அவர் வந்து அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இப்போது எல்லா கிராமத்துக்கும் அந்த காவிரி குடிநீரை கொண்டு வந்துள்ளோம். அதன்பிறகு இந்த தொகுதியில் உள்ள மக்கள் கேட்ட அனைத்தும் கிடைத்துள்ளது. அதாவது பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ அலுவலகம், மருத்துவமனை, பேருந்து நிறுத்தம், விராலிமலை கோயிலுக்கு மலைப்பாதை, புறவழிச்சாலை என தங்கள் பகுதியில் எது நிறைவேற வேண்டும் என நினைத்தார்களோ 10 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்தபோது நிறைவேற்றியுள்ளோம். இதுதான் உண்மை. மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க தேவையும் உயரும். அதையும் நிச்சயம் சரி செய்வோம். மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாகும். அதற்கு நான் துணை நிற்பேன்” என விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சொல்லாததையும் செய்தோம்
தொடர்ந்து பேசிய அவர் விராலி மலை சட்டமன்ற தொகுதி மட்டுமல்லாமல் புதுக்கோட்டை தொகுதி மக்களுக்கு என மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்று இருந்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்துள்ளோம். யாருமே எதிர்பாராத வகையில் சர்ப்பிரைஸாக தமிழகத்தின் 2வது அரசு பல் மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளோம். வேளாண்மை கல்லூரி அமைத்து கொடுத்தோம் என தெரிவித்தார்.
அடுத்து அதிமுக ஆட்சி தான்.. இதுதான் பிளான்
மேலும், “இன்னும் ஒரு சில விஷயங்கள் உள்ளது. அதாவது காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தினால் 7 மாவட்ட விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.அதை செய்ய வேண்டும். திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார்கள். இரண்டு முறை சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அதை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
,மேலும் விராலி மலை நகரத்திற்குள் ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. இன்னும் 2 மாத காலத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் உடனடியாக நிறைவேற்றப்படும்” என விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.





















