Suzuki Electric Scooter: நாங்க மட்டும் சும்மாவா?.. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கும் சுசுகி நிறுவனம்
சுசுகி நிறுவனம் தனது முதல் மின்சார இருசக்கர வாகன மாடலை எப்போது சந்தைக்கு கொண்டு வரும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பொதுமக்களிடையே மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மின்சார பைக்குகளை விட ஸ்கூட்டர்களின் விற்பனை இந்தியாவில் கணிசமாக உள்ளது. இதன் காரணமாக, ஓலா, ஏதர், ஹீரோ கார்ப்ரேஷன் என பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், சுசுகி நிறுவனமும் தனது முதல் மின்சார ஸ்கூட்டரை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்தடுத்து வர உள்ள 8 மாடல்கள்:
வரும் 2030 ஆண்டு வரையிலான சர்வதேச செயல் திட்டம் மற்றும் புதிய வாகனங்கள் வெளியீடு திட்டம் பற்றிய தகவல்களை சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் அடுத்த கட்ட திட்டங்கள் ஆகியவற்றுடன், சில சுவாரஸ்யமான மின்சார வாகனங்களின் மாடல் தொடர்பான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதன்படி, சுசுகியின் மின்சார இருசக்கர வாகனங்கள் பிரிவில் 2030 ஆண்டிற்குள் மொத்தம் எட்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
முதல் மின்சார வாகனம்:
சுசுகி நிறுவனத்தின் முதல் மின்சார இருசக்கர வாகனம் 2024 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே சுசுகி நிறுவனத்தின் மின்சார பர்க்மேன் ஸ்டிரீட் மாடல் வாகனத்தை சோதனை செய்யும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளன. ஆனாலும், அக்சஸ் மின்சார மாடலே சுசுகியின் முதல் மின்சார இருசக்கர வாகனமாக அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அக்சஸ் மாடல் சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் வாகன மாடல் ஆகும். மேலும் இது பர்க்மேன் ஸ்டிரீட் IC இன்ஜின் வேரியண்டை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் இது சுசுகியின் எண்ட்ரி லெவல் மின்சார ஸ்கூட்டர் மாடலாக இருக்கும். விற்பனை பட்டியலில் மின்சார பர்க்மேன் ஸ்டிரீட் மாடலின் கீழ் அக்சஸ் மாடல் நிலை நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.
7 ஆண்டுகள் திட்டம்:
மின்சார வாகனங்கள் வெளியாகும் போதிலும், தொடர்ந்து IC என்ஜின் வாகனங்கள் பிரிவிலும் சுசுகி நிறுவனம் கவனம் செலுத்த உள்ளது. அடுத்த ஏழு ஆண்டுகளில் IC என்ஜின் மற்றும் மின்சார வாகனங்களுக்கு முறையே 75:25 முறையில் புதிய மாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு புதிய வாகனங்கள் அறிமுகமாகியுள்ளன. மோட்டார்சைக்கிள் பிரிவில் சுசுகி நிறுவனம் எந்த மாடல்களின் மின்சார வெர்ஷனை அறிமுகம் செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், ஜிக்சர் சீரிஸ் தான் எலெக்ட்ரிக் வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்து பல முன்னணி நிறுவனங்களும், மின்சார வாகன உற்பத்தியில் களமிறங்குவதால், விரைவிலேயே இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார வாகனங்கள் அதிகளவில் கோலோச்சும் என நம்பப்படுகிறது. அதோடு, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் மாசுபாடு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Before You Go
Tirupati laddu to ayodhya: அயோத்தி ராமருக்கு ஏழுமலையானின் GIFT! | Ayodhya Ram Temple | ttd
ட்ரெண்டிங் செய்திகள்






















