Trump on Hamas: ''ஹமாஸோட முடிவு இன்னும் 24 மணி நேரத்துல தெரிஞ்சுடும்''; ட்ரம்ப் கூறியது எதைப் பற்றி தெரியுமா.?
இஸ்ரேலுடன் போரிட்டுவரும் ஹமாஸ் அமைப்பின் முடிவு இன்றும் 24 மணி நேரத்தில் தெரிந்துவிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் எதைப்பற்றி கூறினார் தெரியுமா.?

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டு வருவதும் தெரிந்ததே. இச்சூழலில், ஏற்கனவே இஸ்ரேல் தனது முன்மொழிவுக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அவரது முன்மொழிவு குறித்து ஹமாஸின் முடிவு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அது என்ன என பார்க்கலாம்.
“இன்னும் 24 மணி நேரத்தில் ஹமாஸின் முடிவு தெரியவரும்“
சில நாட்களுக்கு முன்னர், 60 நாட்கள் போர் நிறுத்தத்திற்கான தனது முன்மொழிவையும், அதற்கான நிபந்தனைகளையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அந்த முன்மொழிறை, அமைதிக்கான இறுதி முன்மொழி என குறிப்பிட்டிருந்தார் ட்ரம்ப்.
இந்த நிலையில், இந்த முன்மொழிவிற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டதா என அவரிடம் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ட்ரம்ப், “என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், இன்னும் 24 மணி நேரத்தில் ஹமாஸின் முடிவு தெரியவரும்“ என்று கூறியுள்ளார்.
மேலும், தனது முந்தைய ஆட்சி காலத்தில், இஸ்ரேல் மற்றும் சில வளைகுடா நாடுகளுடனான உறவுகளை இயல்பாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்திய ஆபிரகாம் உடன்படிக்கையை விரிவுபடுத்துவது குறித்து சவுதி அரேபியாவுடன் பேசியதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஹமாஸ் என்ன நினைக்கிறது.?
இதனிடையே, ட்ரம்ப்பின் ஒப்பந்தம், இஸ்ரேல் - காசா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவரும் உத்தரவாதத்தை அளிக்குமா என ஹமாஸ் கேட்பதாக கூறப்படுகிறது.
ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், நேற்று கூட, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், போர் முடிவுக்கு வருமா என்ற சந்தேகம் ஹமாஸிற்கு இருந்து வருகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்
கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 1,200 பேரை கொன்றதோடு, நூற்றுக்கணக்கானோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி, அது போராக உருவெடுத்தது.
தங்களை தாக்கிய ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காசா பகுதியில் போர் விமானங்கள், ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தியது. போரின் போது, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட அகதிகள் மீதும் இஸ்ரேல் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில், ஐ.நா ஊழியர்கள் 50 பேர் கொல்லப்பட்டனர். அதோடு, ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவளிக்கும் மற்ற நாடுகள் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும், ஏமனில் உள்ள ஹைதிக்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியது இஸ்ரேல் ராணுவம். இந்த போரில் இதுவரை 46,000-த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில்தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்து வருகிறார். ஆனால், ஒருபுறம் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. எனினும், தற்போது இஸ்ரேல், ட்ரம்ப்பின் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஹமாஸின் முடிவு என்ன என பொறுத்திருந்து பார்க்கலாம்.




















