H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
விஜய் அவர்களின் வாகனத்தை அதிவேகமாகப் பின்தொடர்ந்த இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, தமிழக வெற்றிக் கழகத்தின் தொடர் நிகழ்வுகளில் நிலவி வரும் பாதுகாப்பு குளறுபடிகள் மற்றும் ஒழுங்கீனங்கள் குறித்து தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.
தொடர்கதையாகும் துயரங்கள்:
இது குறித்து எச்.ராஜா கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பலியான வடு இன்னும் ஆறாத நிலையில், இன்று தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்விலும் அதே போன்றதொரு பதற்றமான சூழல் நிலவியுள்ளது. விஜய் அவர்களின் வாகனத்தை அதிவேகமாகப் பின்தொடர்ந்த இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் தற்செயலானவை என்பதைத் தாண்டி, முறையான திட்டமிடல் இல்லாததையே காட்டுவதாக எச். ராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆவேச கூட்டம்
தஞ்சை மாநாட்டு திடலில் பாதுகாப்பு வேலிகளைத் தகர்த்துக்கொண்டு இளைஞர்கள் முண்டியடித்துக்கொண்டு ஓடி வரும் காட்சிகள், அங்கு நிலவிய பாதுகாப்பு குறைபாட்டைத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன. தவெக நடத்தும் நிகழ்ச்சிகளில் தனி மனித கட்டுப்பாடோ, துல்லியமான திட்டமிடலோ எதுவுமே பின்பற்றப்படாமல் ஒழுங்குமுறையற்ற ஒரு ஆவேச கூட்டம் நடைபெறுவது போலவே இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதோடு, தொண்டர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகிறது.
இது விஜயின் கடமை
தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் தனது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் வெறும் உணர்ச்சியூட்டும் உரைகளை மட்டும் வழங்காமல், வாழ்வியல் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்த தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும். சாலையில் செல்லும்போதும், பொது இடங்களில் கூடும்போதும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்காதவாறு, பக்குவத்தோடு கட்சியினர் நடந்து கொள்வதற்கான உளவியல் ரீதியான மாற்றத்தை தலைமையே முன்னெடுக்க வேண்டும்.
பெற்றோர்களின் மத்தியில் அச்சம்:
கட்சி நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் நிலவுவது ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. இளைஞர்களின் பெற்றோர்கள் ஒருவித அச்சத்துடனேயே இருப்பதை இனி வரும் காலங்களில் தவிர்க்கும் வகையில், தவெக தலைமை தனது தொண்டர்களை நெறிப்படுத்த வேண்டும். பொது அமைதிக்கு ஊறு விளைவிக்காமல் அரசியல் பணிகளை மேற்கொள்வதே ஒரு முதிர்ச்சியான இயக்கத்திற்கு அடையாளம் என திரு. எச். ராஜா அறிவுறுத்தியுள்ளார்.
























