DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் கடைசி நேரத்தில் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் திமுகவுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியதில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என கூறியுள்ளார்.
இழுபறியாக நீடித்த கூட்டணி
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளது. தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளிலும், தொகுதி பங்கீட்டை மேற்கொள்ளும் பணிகளிலும் திமுக மும்முரமாக உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என ஏகப்பட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடிக்குமா என்ற கணிப்பு இழுபறியாக நீடித்தது. அக்கட்சியின் தலைவர்கள் சிலர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரத்தில் பங்கு என்பதை மறுத்தார். தொடர்ந்து 41 தொகுதிகள் வேண்டும் என கேட்டு காங்கிரஸ் அடம் பிடித்தது. ஆனால் தேமுதிகவும் உள்ளே நுழைந்த நிலையில் கடந்த முறை கூட்டணிக்கு வழங்கிய தொகுதிகளை குறைத்து தேமுதிகவுக்கும் வழங்க திமுக முடிவு செய்தது.
ஆனால் காங்கிரஸ் கட்சி விடாப்பிடியாக இருந்தால் பெரும் சிக்கல் நிலவியது. அதேசமயம் திரை மறைவில் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.
ஓகே ஆன திமுக - காங்கிரஸ் கூட்டணி
இந்நிலையில் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் திமுகவுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியதில் அக்கட்சிக்கு 28 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தொகுதி பங்கீடு தொடர்பாக பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், எங்கள் பலம் எங்கள் தலைமை தான். ராகுல் காந்திக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. எங்கள் கட்சிக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். இது இந்த கூட்டணிக்கு மதிப்பை சேர்க்கிறது. எங்கள் வாக்கு வங்கி 14% க்கும் அதிகமாக உள்ளது.
மேலும் சில நேரங்களில் 20% ஆகவும் உயரும். அதேசமயம் எங்கள் மிகப்பெரிய பலம் உள்ளூர் தலைவர்களின் பங்கேற்பு என கூறலாம். நாங்கள் எங்கள் தொண்டர்கள் மீது கவனம் செலுத்தினோம். அவர்கள் ஆட்சியில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். மேலும் எங்களுக்கு ஒரு பெரிய விருப்பப்பட்டியல் இருந்தது. ஆனால் ஒரு கூட்டணியில் எல்லாவற்றையும் அடைய முடியாது.
திமுக உட்பட ஒரு கூட்டணியில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அனைத்து கட்சிகளும் தியாகம் செய்யும்போதுதான் கூட்டணி நடக்கும். நாங்களும் தியாகம் செய்துள்ளோம். எங்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அவை அனைத்தையும் நிறைவேற்ற முடியாது. 28 என்ற எண்ணில் நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் நாம் தியாகம் செய்து முன்னேற வேண்டும் என்பதால் ஏற்றுக் கொண்டோம் என தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















