Pentagon Warns Trump.?: ஏவுகணைகள் காலியாகப் போகுது.! கதறும் பென்டகன்; அதிர்ச்சியில் ட்ரம்ப்.. போர் தொடருமா.?
ஈரான் போரில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ட்ரம்ப் மார் தட்டி வரும் நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அவருக்கு முக்கிய வார்னிங் ஒன்றை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன தெரியுமா.?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்து, தற்போது அந்த போர் தீவிமடைந்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், இந்த போரில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் இந்த போரை நடத்த முடியும் என்று அவர் தெரிவித்த நிலையில், அதற்கு ஆப்பு வைக்கு விதமாக, அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன், ட்ரம்ப்பிற்கு ஒரு வார்னிங்கை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலால், ட்ரம்ப் போரை தொடர்ந்து நடத்துவாரா என்ற கேள்வியே எழுந்துள்ளது.? சரி, அந்த தகவல் என்னவென்று இப்போது பார்க்கலாம்.
நீண்ட கால போருக்கு தயார் என கூறிய இரு தரப்பு
அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் தனது பதிலடியில், பஹ்ரைன், சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த சூழலில், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், ஒரு வாரத்தில் போர் முடிந்து விடும் என்று முன்பு கூறியிருந்தார். ஆனால், ஈரான் விடாமல் பதிலடி கொடுத்து வரும் நிலையில், அதன் பின்னர் பேசும்போது, இந்த போர் 4 முதல் 5 வாரங்களில் முடிந்துவிடும், எனினும் நீண்ட கால போரை நடத்தும் அளவிற்கு தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்த ஈரான், நீண்ட காலப் போருக்கு தாங்களும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், இந்த போர் இப்போதைக்கு முடியாது என்றே அனைவரும் எண்ணியுள்ளனர்.
ட்ரம்ப்பிற்கு பென்டகன் கொடுத்த முக்கிய வார்னிங்
இதனிடையே, தற்போது 5-வது நாளாக போர் நீடித்து வரும் சூழலில், இந்த போர் இன்னும் 10 நாட்கள் தொடர்ந்தால், அமெரிக்காவிடம் உள்ள முக்கியமான ஏவுகணைகளின் கையிருப்பு தீர்ந்துவிடும் என்று அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகனின் அதிகாரிகள் ட்ரம்ப்பிடம் தெரிவித்துள்ளதாக அல் ஜசீராவின் அறிக்கை கூறுகிறது.
அதேபோல், போர் நீண்ட நாட்கள் தொடரும் பட்சத்தில், வெடிமருந்து இருப்புகளை நிரப்புவதற்கான செலவும் அதிக அளவில் ஏற்படும் என்றும் பென்டகன் எச்சரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனினும், முன்னதாக ட்ரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், "அமெரிக்காவின் வெடிமருந்து கையிருப்பு, நடுத்தர மற்றும் உயர் நடுத்தர தரத்தில், ஒருபோதும் உயர்ந்ததாகவோ அல்லது சிறப்பாகவோ இருந்ததில்லை. இன்று எனக்குக் கூறப்பட்டது போல, இந்த ஆயுதங்களின் வரம்பற்ற விநியோகம் எங்களிடம் உள்ளது. போர்களை 'என்றென்றும்' நடத்த முடியும். மேலும், இந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்தி மிகவும் வெற்றிகரமாக போரை நடத்த முடியும்," என்று கூறியிருந்தார்.
மேலும், ஈரான் மீதான தாக்குதல் "நான்கு முதல் ஐந்து வாரங்கள்" வரை தொடர திட்டமிடப்பட்டுள்ளதாக திங்களன்று டிரம்ப் கூறியிருந்தாலும், அது அதை விட நீண்ட காலம் நீடிக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
ஏற்கனவே எச்சரித்த அமெரிக்க ராணுவத் தலைவர்
முன்னதாக, பிப்ரவரி 23-ம் தேதி ஒரு செய்தியை வெளியிட்ட தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பென்டகன் அதிகாரிகளும், கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் டான் கெய்னும், ஈரானுக்கு எதிரான நீடித்த போரின் அபாயங்கள் குறித்து ட்ரம்பை எச்சரித்ததாக கூறியிருந்தது.
அதேபோல், முக்கியமான வெடிமருந்துகளின் பற்றாக்குறை, ஈரானியர்களின் பதிலடியை கட்டுப்படுத்தும் முயற்சிகளை தடுக்கக்கூடும் என்றும் கெய்ன் அதிபர் ட்ரம்ப்பிடம் எடுத்துக்காட்டியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், தற்போது பென்டகனின் எச்சரிக்கை குறித்த செய்தி வெளியாகியுள்ளது. இதனால், ட்ரம்ப் இந்த போரை தொடர்ந்து நடத்துவாரா என்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கு விடையை அவரேதான் கூற வேண்டும்.























