AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளேன். இதனை நாங்கள் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாதம் முதலே தொடங்கினோம் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புதிய கட்சி உருவாகியுள்ளது. அதாவது அதிமுக ஆதரவாளரான புகழேந்தி புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பிரிவு - புதிய கட்சிகள்
2016ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் போன்றோர் 2017ம் ஆண்டு ஓரம் கட்டப்பட்டனர். இதில் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2022ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அக்கட்சியின் முகமாக அறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் டென்ஷனான ஓபிஎஸ் “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு” என்ற அமைப்பை தொடங்கினார்.
சமீபத்தில் சசிகலா ஒரு கட்சியை தொடங்கியுள்ளார். அதிமுக மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை தொடங்கிய நிலையில் தற்போது புகழேந்தியும் கட்சி தொடங்கியுள்ளார்.
புரட்சி அதிமுக தோன்ற காரணம்
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஆதரவாளரான புகழேந்தி, “புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளேன். இதனை நாங்கள் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாதம் முதலே தொடங்கினோம். படிப்படியாக நடைபெற்ற விசாரணைகளை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது. சில விஷயங்களை சரி பண்ண சொல்லி கேட்டாங்க. அதையும் மாற்றியுள்ளோம். தேவைப்பட்ட ஆய்வு எல்லாம் முடிந்து விட்டது. முறைப்படி கட்சியை பதிவு செய்து விட்டோம். பல பேர் மன்னாரன் கம்பெனி மாதிரி கட்சி தொடங்கி விட்டதாக தெரிவிப்பார்கள். அதையெல்லாம் நாம் பண்ணப்போவதில்லை. தேர்தல் ஆணையத்தின் நடைமுறை எல்லாம் முடிந்த பிறகு நான் இதனை தெரிவிக்கிறேன்.
சட்டமன்ற தேர்தல் வந்து விட்டது. அதனால் எங்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டும். தேர்தலில் நிற்க தயாராக உள்ளோம். இல்லாவிட்டால் ஆதரவு கொடுக்கவும் ரெடியாக இருக்கிறோம். ஏன் இந்த கட்சி தொடங்கும் நிலைப்பாட்டை எடுத்தோம் என கேட்கிறார்கள். ரொம்ப சோர்ந்து போய் விட்டோம். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தால் எந்த கட்சிக்கு போவதா என்ற சூழல் எழுந்து விட்டது. தடுமாறிய தலைவர்களின் அரசியல் வழியால் வேறு வழியில்லாமல் பலரின் கருத்தை மனதில் கொண்டு விருப்பமில்லாமல் பிற கட்சியில் இணைகிறார்கள்.
ஆகவே, இதையெல்லாம் பார்த்து விட்டு தான் கட்சி தொடங்கியுள்ளேன். இந்த இயக்கம் தொடர வேண்டும். அம்மா, தலைவர் புகழ் நிரந்தரமாக இருக்க வேண்டும். கண்ணீர் விட்டு அழும் தொண்டர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த புரட்சி அதிமுக தொடங்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக எல்லா வேலையும் முடிந்து விட்டது. நாளை (இன்று) சென்னையில் நான் போய் இறங்கியவுடன் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆதரவு தர வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளோம் என தெரிவித்தார்.





















