’பயிர் காப்பீடு வழங்குக’ வயலில் கருப்புக் கொடி கட்டிய விவசாயிகள்...!
கடை மடைக்கு தண்ணீரும் வராது, நிலத்தடி நீரும் போதிய அளவு இல்லை. அப்படி இருக்கையில் அரும்பாடுப்பட்டு விவசாயம் செய்தாலும், பெருமழை, புயல் என போட்ட முதலை கூட எடுக்க முடியாத விவசாயிகளுக்கு, காப்பீட்டு தொகையாவது முழுமையாக வந்து சேருமா ?
மயிலாடுதுறை அருகே 2020-2021ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க தமிழக அரசை வலியுறுத்தி தரிசு நிலத்தில் கருப்புக் கொடி நட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் விளங்கி வருகிறது. இந்நிலையில் போதிய மழையின்மை, சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாத காரணம், அப்படி உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும், வாய்க்கால்கள் சரியான முறையில் தூர்வாராததால் காவிரி கடைமடையான இந்த பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேராதது போன்றவற்றால் விவசாயம் என்பது கடும் சிரமத்திற்கு ஒன்றாக மாறி இருக்கிறது.
இருந்தும் காலம் காலமாக விவசாய தொழிலை மட்டுமே நம்பி உள்ள இப்பகுதி விவசாயிகள், நிலத்தடி நீரை வைத்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருவதால், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும், சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
அவ்வாறு நிலத்தடி நீரை வைத்து விவசாயத்தில் ஈடுபட்டு பயிர்களை காப்பாற்றி வரும் விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி அறுவடை காலம் மார்கழி, மற்றும் தை மாதம் என்பதால், அந்த மாதங்களில் ஏற்படும் புயல், கனமழை உள்ளிட்டவற்றில் சிக்கி கடும் பாடுபட்டு செய்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இது போன்ற பேரிடர் காரணங்களால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைந்த அளவிலாவது ஈடுசெய்யும் விதத்தில் விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்து வருகின்றனர். இருந்தும் விவசாயிகள் செய்யும் பயிர் காப்பீட்டு அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் காலத்தில் உரிய முறையில் கணக்கீடு செய்து காப்பீட்டுத் தொகை வழங்காதது, தொகையை குறைத்து கொடுப்பது, காலம் தாழ்த்துவது என காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு புரெவி மற்றும் நிவர் புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா சாகுபடி முற்றிலும் சாய்ந்து மழை வெள்ள நீரில் மூழ்கி பாழானது. இந்த சூழலில் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்திருந்த இம்மாவட்ட விவசாயிகள் பலருக்கும் இதுநாள் வரை காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என தெரிவிக்கும் விவசாயிகள், கடந்த ஆண்டு சம்பா சாகுபடிக்காக தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கும் பணம் வாங்குயும் சாகுபடி செய்தனர். ஆனால், தங்களால் இந்த ஆண்டுக்கான குறுவை சாகுபடி செய்ய கையில் பணமின்றி தவித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள். தங்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு உடனடியாக பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வழிவகை செய்யவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கையை முன் வைத்து தரங்கம்பாடி தாலுக்கா சேத்தூர் கிராமத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி தொடங்காத தங்களின் தரிசு நிலத்தில் கருப்புக் கொடியை நட்டு வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு கவனம் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets