FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
FM Nirmala Sitharaman On TN Budget: தமிழக அரசு பட்ஜெட் ஆவணங்களில் ரூபாய்க்கான '₹' இலச்சினை நீக்கப்பட்டதற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

FM Nirmala Sitharaman On TN Budget: தமிழக அரசு பட்ஜெட் ஆவணங்களில் ரூபாய்க்கான '₹' இலச்சினை நீக்கப்பட்டது, தவிர்க்கப்பட வேண்டியது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
இலச்சினையை நீக்கிய தமிழ்நாடு அரசு:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டிற்கான அறிவிப்பபு நேற்று வெளியிடப்பட்டது. அதில் ரூபாயை குறிப்பிடும் '₹' என்ற தேவநாகரி ரூபாய் சின்னத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக தமிழில் ரூ என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் '₹' சின்னம் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நிலவி வரும் மும்மொழிக் கொள்கை பிரச்னைக்கு மத்தியில் அந்த இலச்ச்னை நீக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜகவினர் இதற்கு கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நிதியமைச்சர் ஆவேசம்:
அந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அரசின் நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பான சமூக வலைதள பதிவில், “தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னமான '₹' ஐ நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது. திமுகவிற்கு உண்மையிலேயே '₹' உடன் பிரச்சனை இருந்தால், 2010 ஆம் ஆண்டு
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோது, இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?
'₹' - இந்தச் சின்னத்தை முன்னாள் திமுக எம்எல்ஏ என். தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றுவதன் மூலம், திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.
சமஸ்கிருதத்துடன் தொடர்பு
மேலும், ரூபாய் என்ற வார்த்தை 'வெள்ளியால் செய்யப்பட்ட' அல்லது 'வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்' என்று பொருள்படும் 'ருப்யா' என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சொல் பல நூற்றாண்டுகளாக தமிழ் வர்த்தகம் மற்றும் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது, இன்றும் கூட, 'ரூபாய்' என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நாணயப் பெயராகவே உள்ளது. இந்தோனேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக 'ரூபாய்' அல்லது அதன் சமமான பெயர்களை தங்கள் நாணயப் பெயராகப் பயன்படுத்துகின்றன. 'ரூபாய்' என்ற சொல், சமஸ்கிருதத்தில் தோன்றியதால், தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பகிரப்பட்ட கலாச்சார, பொருளாதார மரபாகும் என்பது தெளிவாகிறது.
ரூபாய் சின்னம் '₹' என்பது சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் அடையாளமாக செயல்படுகிறது. UPI ஐப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா?
பிரிவினைவாத முயற்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள். மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும், மேலும் இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது.
இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாகவும் இது உள்ளது” என நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.





















