IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில் இந்திய பந்து வீச்சாளர்களை டி காக் வெளுத்து வாங்கினார். 46 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டர்கள், 7 சிக்ஸர்களுடன் 90 ரன்கள் குவித்து ரன் அவுட்டானார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
2வது டி20 போட்டி
தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவும் வென்றது. இதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 101 ரன்கள் வித்யாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து 2வது போட்டியானது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
வெளுத்து வாங்கிய தென்னாப்பிரிக்கா
அதன்படி தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன்-டி-காக் மற்றும் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் களம் கண்டனர். கடந்த போட்டியில் டக் அவுட்டான டி காக் இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடினார். ஹென்ட்ரிக்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் இந்திய பந்து வீச்சாளர்களை டி காக் வெளுத்து வாங்கினார்.
46 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டர்கள், 7 சிக்ஸர்களுடன் 90 ரன்கள் குவித்து ரன் அவுட்டானார். இதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் எய்டன் மார்க்ரம் 29 ரன்களிலும், டிவால்ட் பிரேவிஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டோனாவன் ஃபெர்ரிரா 30 ரன்களும், டேவிட் மில்லர் 20 ரன்களும் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும், அக்ஸர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்தீப் சிங் 54 ரன்களும், ஜஸ்பிரீத் பும்ரா 45 ரன்கள் கொடுத்தும் விக்கெட்டுகள் எதையும் கைப்பற்றவில்லை. அதுமட்டுமல்லாமல் எக்ஸ்ட்ராஸ் வகையில் 22 ரன்களை இந்திய அணி வாரி வழங்கியது. 16 வைடுகள் போடப்பட்ட நிலையில் அதில் 8 வைடுகளை அர்தீப் சிங் வீசினார்.
பஞ்சரான இந்திய அணி
இதனைத் தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் கண்டது. சுப்மன் கில் டக் அவுட்டானார். அபிஷேக் சர்மா 17 ரன்களிலும், கேப்டன் சூர்ய குமார் யாதவ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனிடையே திலக் வர்மா மட்டும் ஒற்றை ஆளாக போராடினார். அவர் 62 ரன்கள் குவித்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா 20 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 27 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 51 ரன்கள் வித்யாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலை வகிக்கிறது. 3வது டி20 போட்டி வரும் டிசம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ளது.





















