சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா என்று தாழ்த்திப் பேசினாலும் அதனை ஒருபோதும் அழிக்க முடியாது ஆளுநர் ஆர்.என்.ரவி
பாரத தேசத்தில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்டு வரும் சனாதன தர்மத்தை அழிய விடாமல் காப்பதில் ஆதீனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் மணிவிழா மாநாடு நேற்று முன்தினம் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொண்டார் முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் ஆளுநருக்கு வரவேற்பு அளித்தார்.தொடர்ந்து மணிவிழா நூலினை வெளியிட்டு , மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.
தருமபுரம் ஆதீனம் நிகழ்ச்சியில் ஆளுநர் உரை
உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
பாரதத்தின் பாரம்பரியம்: நமது பாரதம் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டது. பக்தி இலக்கியங்கள், முனிவர்கள், மற்றும் ஆலயங்கள் நமது பாரம்பரியத்தை இன்றும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றன.
தருமபுரம் ஆதீனத்தின் சேவை: தருமபுரம் ஆதீனம் கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரத தேசத்தில் தர்ம சனாதனத்தை நிலைநிறுத்திப் பாதுகாத்து வருகிறது. ஆதீனங்கள் போன்ற இயக்கங்கள் நமது தொன்மையான பாரம்பரியத்தை காலங்காலமாகக் காத்து வருகின்றன.
தமிழகம் புண்ணிய பூமி: தமிழகம் ஒரு புண்ணிய பூமி என்றும், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் நிறைந்த இடம் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். சனாதனம் என்ற அடிப்படையைக் கொண்டே பாரதம் எழுப்பப்பட்டுள்ளது.
சனாதனம் அழிவில்லாதது: சனாதன கொள்கையை அழியாமல் பாதுகாப்பதில் ஆதீனங்களின் பங்கு மகத்தானது. சனாதனத்தை டெங்கு, மலேரியா என்று தாழ்த்திப் பேசினாலும் அதனை ஒருபோதும் அழிக்க முடியாது.
இறைவனின் படைப்புகள்: இறைவனின் படைப்புகளில் அனைத்து உயிரினங்களும் ஒரே குடும்பமாகவே பார்க்கப்படுகின்றன.
ஆங்கிலேயர் ஆட்சியில் பாரம்பரிய எதிர்ப்பு
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நமது பாரம்பரியம், மொழி ஆகியவற்றை அவர்கள் அழிக்க முயன்றதாகவும், குறிப்பாகத் தமிழ் மொழியை ஆங்கிலேயர்கள் வெறுத்ததாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். மேலும், அதனை ஒரு மொழியாகக்கூட ஏற்றுக் கொள்ள ஆங்கிலேயர்கள் முன்வரவில்லை என்றும், இதை எதிர்த்து மகாகவி பாரதியார் போராடியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
பிரதமர் மோடி மற்றும் ஆதீனத்தின் சேவைகள்
* கல்விச் சேவை: தருமபுரம் ஆதீனம் 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நிறுவி, கல்விச் சேவையை வழங்கி வருகிறது.
* பிரதமரின் தமிழ்ப் பற்று: பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குத் தமிழ் மொழி மீது மிகுந்த மரியாதை உள்ளது. அதன் விளைவாகவே, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
* வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோல்: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மடாதிபதிகளை அழைத்து, செங்கோலைப் பெற்று அதனை ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றிய பெருமை பிரதமருக்கு உண்டு.
* காசி தமிழ் சங்கமம்: பாரதப் பிரதமர் அறிவித்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் காசி விசுவநாதரைத் தரிசனம் செய்துள்ளனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் அவர்கள் 60 வயதில் இளமையாக இருப்பதாகவும், அவர் குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் வாழ்ந்து சைவ மதத்திற்கும், நாட்டிற்கும் தொண்டு செய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டுவதாகவும் கூறி ஆளுநர் தனது உரையை முடித்தார்.



















