கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா ஏற்பு - அடுத்தது என்ன?
மேயர் கல்பனா ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில், அது தொடர்பாக கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் திமுகவின் முதல் மேயர் ஆகிய சிறப்புகளுடன் பதவியேற்ற கல்பனா ஆனந்தகுமார் இரண்டே ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கல்பனா பதவியேற்றபோது எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர், பேருந்தில் சென்னை சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தவர் ஆகிய நேர்மறையான அவரது பிம்பங்கள், மேயராக பதவியேற்ற பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்தது. மேயராக பொறுப்பேற்றவுடன் திமுக கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் செயல்பட்டது, மாநகராட்சி மண்டல தலைவர்களுடன் இணக்கமாக இல்லாமல் மோதல் போக்குடன் செயல்பட்டது, நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முறையாக வேலை பார்க்காமல் இருந்தது உள்ளிட்ட தொடர் புகார்கள் எழுந்தன. கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் சந்தை வசூல் செய்தது, ஒப்பந்ததாரர்களிடம் கமிசன் கேட்டது, பக்கத்து வீட்டை பெண்ணை காலி செய்ய தொல்லை கொடுத்தது என அடுத்தடுத்து சர்ச்சைகளிலும் சிக்கினார். இதன் காரணமாக அவரை ராஜினாமா செய்ய கட்சி தலைமை அறிவுறுத்தியது. இதனையடுத்து உடல் நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

ராஜினாமா ஏற்பு
மேயர் கல்பனா ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில், அது தொடர்பாக கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா, விவாதமின்றி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதனிடையே மேயராக இருந்த கல்பனா பதவி விலகியதற்கான காரணத்தை தெரியப்படுத்த வேண்டுமென அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கேட்டதால், திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடந்த அதிமுக ஆட்சியில் மேயராக இருந்த செ.ம. வேலுசாமி பதவி விலகிய போது காரணத்தை தெரியப்படுத்தவில்லை எனவும், உடல்நிலை மற்றும் குடும்பச் சூழல் காரணமாக கல்பனா ராஜினாமா செய்திருப்பதாகவும் திமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். அதேபோல கல்பனா மேயர் பதவியை மட்டுமே ராஜினாமா செய்திருப்பதாகவும், கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யவில்லை எனவும் துணை மேயர் தெரிவித்தார்.
சிறப்புக்குழு விசாரணை வேண்டும்
மாநகராட்சி கூட்டத்திற்கு பின்னர் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இன்று நடந்த கூட்டத்தில் மாநகராட்சி திமுக மேயர் கல்பனா ராஜினாமா தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்பனா ஆனந்தகுமார் செயலற்ற மேயராக இருந்தார். கோவை மாநகராட்சியில் கடந்த இரண்டரை வருடங்களாக ஊழலை தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல, முதலமைச்சர் மேயரை ராஜினாமா செய்ய வைத்துள்ளார். மாநகராட்சியில் லஞ்ச லாவணியம் கரை புரண்டு ஓடுகிறது. மேயர் நேரடியாக ராஜினாமா கடிதம் தராமல் உதவியாளர் மூலம் தந்துள்ளார். அவர் அந்த பொறுப்பிற்கு மதிப்பு தெரியாதவராக உள்ளார். மேயர் ராஜினாமா தொடர்பான விசாரணை நடத்த வேண்டும். கல்பனா என்னென்ன ஊழல் செய்தார் என்பது குறித்து சிறப்பு தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மேயர் கல்பனா பதவி விலகியதற்கான காரணத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா குறித்த விபரம் நகராட்சி நிர்வாக துறைக்கு அனுப்பபட இருக்கின்றது. பின்னர் அங்கிருந்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பபட்ட பின்னர், மேயர் தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும். இதையடுத்து திமுக தலைமை ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும். தேர்தல் நாளில் மாமன்ற உறுப்பினர்கள் மேயரை தேர்வு செய்வார்கள். திமுக பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், திமுக வேட்பாளர் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அடுத்த ஒரு மாத காலத்திற்குள் கோவை மாநகராட்சியின் புதிய பெண் மேயர் யார் என்பது தெரியவரும்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















