TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
சங்கீதா விவாகரத்து கோரியிருக்கும் நிலையிலும், குற்றச்சாட்டை அடுக்கியிருக்கும் நிலையிலும் தஞ்சையில் நாளை விஜய் என்னப் பேசப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தல் முன்பு இருந்த தேர்தல்களை காட்டிலும் கடும் சவால் மிகுந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆளுங்கட்சியான திமுக-விற்கும், ஆட்சியை மீண்டும் கைப்பற்றத் துடிக்கும் அதிமுக-விற்கும் கடும் சவால் அளிக்கும் கட்சியாக இருப்பது தவெக.
நாளை என்ன பேசப்போகிறார் விஜய்?
தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் கொண்டுள்ள விஜய், இந்த தேர்தலில் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்குவார் என்றே கருதப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் இரு மாத காலமே உள்ள நிலையில், விஜய்யிடம் இருந்து அவரது மனைவி விவாகரத்து கோரியிருப்பதுடன், விஜய்க்கும் மற்றொரு நடிகைக்கும் இடையே தொடர்பு இருப்பதாக அவரது மனைவி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு மிகப்பெரிய அதிருப்தியை தவெக தொண்டர்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது.
இந்த சூழலில், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் விஜய் நாளை தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேச உள்ளார். விஜய் ஒவ்வொரு முறை பேசும்போதும் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாவது வழக்கம். ஆனால், இந்த முறை அவர் என்ன பேசப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
பதில் அளிப்பாரா?
தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையிலும், தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், குறிப்பாக பெண்கள் மத்தியில் தன் மீது எழுந்துள்ள அதிருப்திக்கு பதில் தரும் வகையிலும் விஜய்யின் பேச்சு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் அரசியல் கட்சி தொடங்கி சில மாதங்கள் அமைதியான போக்கில் இருந்தார். பின்னர், அவர் தனது அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் அறிவித்தார். அப்போது முதலே அரசியல் ரீதியான விமர்சனங்களை அவரது செயல்பாட்டின் காரணமாக எதிர்கொண்டு வருகிறார்.
எப்படி கையாளப்போகிறார்?
கரூர் சம்பவம் அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய கரும்புள்ளியாக அமைந்த நிலையில், சுமார் 2 மாதங்களுக்கு பிறகு அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் அரசியல் பயணத்தை தொடங்கினார். தற்போது, அவரது தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் அவரது பொது வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் வகையில் உருவெடுத்துள்ளது.
தனது விவாகரத்து விஷயத்தை விஜய் எப்படி கையாளப்போகிறார்? என்பதைப் பொறுத்தே அவருக்கும், தவெக-விற்குமான அரசியல் எதிர்காலம் அமையும் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.























