“100% மக்களுக்கு தடுப்பூசி கட்டாயம்; இல்லையேல்...” - ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோர் எண்ணிக்கை மிகமிக குறைவாக உள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழக உள் அரங்கில் நேற்று (டிச.16) மாலை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வளர்களை ஒருங்கிணைத்து வீடுகள் தோறும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ”தமிழ்நாட்டில் உள்ள 12,525 ஊராட்சிகளில் 1325 ஊராட்சிகள் மட்டுமே 100% கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதேபோல் 121 நகராட்சிகளில் 10 நகராட்சிகள் மட்டுமே 100% கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எனவே அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் கொரோனா தடுப்பூசியைப் செலுத்திக்கொள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எந்தெந்த ஊராட்சியில் 100% கொரோனா தடுப்பூசி போடப்பட்டதோ அந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினவிழாவில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பாராட்டு சான்றிதழ் அளிக்கப்படும்” எனக் கூறினார்.

மேலும் “சாலை விபத்து ஏற்படும் சமயங்களில் உயிரிழப்பை தடுக்க இன்னுயிர் காப்போம்; நம்மை காக்கும் 48 என்ற புதிய திட்டத்தை நாளை மேல்மருவத்தூரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். அதற்காக தமிழகம் முழுவதும் 610 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் எந்த பகுதியில் விபத்து நடந்தாலும் விபத்துக்குள்ளானவரை அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும், விபத்தில் சிக்கியவருக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் சிகிச்சையும் அளிக்கப்படும்” என்று கூறினார்.

மேலும் “தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை குறைக்க தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 82 சதவிகிதம் வரை முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 52 சதவிகிதம்வரை இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 93 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளது. எனவே பொதுமக்கள் நாளை மறுநாள் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் முகாம்களிலும் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும் “நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கும் மரபியல் மாற்றம் வைரஸ் தொற்று இருக்கலாம் என்பதற்காக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே அதிலிருந்து நம்மைக் காப்பாற்றி கொள்ளலாம்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

இதன் தொடர்ச்சியாக நிகழ்ச்சியில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “கொரோனா வைரஸ் தடுப்பு ஊசியை அனைவரும் தவறாமல் செலுத்தி கொண்டு தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்மை காப்பது மட்டுமில்லாமல் நம்மைச் சார்ந்தவர்களையும் நாம் காப்பாற்ற வேண்டும். கொரானா தடுப்பூசி பணிகளில் சரியான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி 100% தடுப்பூசி போட ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு 100% எட்டாத ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நாங்கள் கட்டாய விடுப்பை அளிப்போம். அது எப்படி அளிக்க வேண்டும் என எங்களுக்கு தெரியும்” என்றும் துரைமுருகன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில துணிநூல் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஆர் காந்தி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்ட ஆட்சியர்களும், ஊராட்சி மன்ற தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
Before You Go
Saranya Ponvannan | ‘’தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையுமா?’' நடிகை சரண்யா TIPS
ட்ரெண்டிங் செய்திகள்






















