பெண்களின் ஆடைபற்றி கருத்தூசி போட்ட ஹாட்ஸ்பாட் 2 மச் படம்..இயக்குநரை வெளுக்கும் நெட்டிசன்கள்
அண்மையில் வெளியான ஹாட்ஸ்பாட் டூ மச் திரைப்படத்தில் பெண்களின் ஆடை சுதந்திரம் பற்றி இடம்பெற்றுள்ள காட்சிகளால் படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார்

கடந்த 2024 ஆம் ஆண்டு ஹாட்ஸ்பாட் திரைப்படத்தின் மூலம் சர்ச்சையை கிளப்பியவர் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். இப்படத்தின் இரண்டாம் பாகமான ஹாட்ஸ்பாட் 2 மச் திரைப்படம் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி வெளியானது. மூன்று கதைகளை கொண்ட ஆந்தலஜி படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் ஒரு கதையில் பெண்களின் ஆடை சுதந்திரம் பற்றி இடம்பெற்றுள்ள இயக்குநரின் கருத்துக்கள் பெண்ணியவாதிகளால் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது
மூன்று வெவ்வேறு கதைகளின் வழியாக மூன்று மெசேஜ்களை சொல்லும் படம் ஹாட்ஸ்பாட் 2 மச். இதில் முதல் கதை திரைப்பட நட்சத்திரங்களை கொண்டாடும் இரு தரப்பு ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கும் விதமாக மர்ம நபர் ஒருவர் அவர்களின் குடும்பத்தினரை கடத்திச் செல்கிறார். இரண்டாவது கதையில் வெளிநாட்டில் இருந்து படிப்பு முடித்து திரும்பி வரும் மகளை (சஞ்சனா திவாரி) தந்தை கூட்டிவரச் செல்கிறார். அப்போது தனது மகள் அணிந்திருக்கும் ஆடை அவரை அசெளகரியத்திற்கு ஆளாக்குகிறது. பெண்களின் ஆடை சுதந்திரம் பற்றி தந்தை மகளை வைத்து தனது கருத்தை பேசியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். இந்த காட்சிகள் தான் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளன.
பெண்கள் ஆடை சுதந்திரம் பற்றி ஹாட்ஸ்பாட் 2 மச்
பொதுவாக பெண்களின் ஆடை சுதந்திரங்களைப் பற்றி பேசும் ஆண்கள் சொல்லும் கருத்து ஒன்றே. அதாவது மாடர்னாக உடை அணிந்தால் அது பார்க்கும் ஆண்களிடம் தவறான எண்ணத்தையே ஏற்படுத்தும் என்பது. ஆனால் பெண்ணியவாதிகள் இந்த கருத்தை தொடர்ச்சியாக விமர்சித்தே வந்துள்ளார்கள். பெண்கள் ஆடை அணிவது அவர்களின் சுதந்திரம் . அவர்களை ஆண்கள் பார்க்கும் பார்வையில் தான் ஆபாசம் இருக்கிறதே ஒழிய ஆடைகளில் இல்லை என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் நமது இயக்குநர்களுக்கு பெண்களைப் பற்றியும் பெண்களுக்கு மெசேஜ் சொல்லவில்லை என்றால் மனசே நிறையாதே.
அப்படியான ஒரு பூமர்தனமான கருத்தை தான் தனது படத்தின் வழியாக சொல்லியிருக்கிறார் ஹாட்ஸ்பாட் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். அதாவது பெண்கள் இடம் பொருள் ஏவல் அறிந்துதான் ஆடை அணிவதை அவர் தீர்வாக முன்வைத்துள்ளார்.
வெளுக்கும் நெட்டிசன்கள்
இந்த கருத்தை ஒருபக்கம் அதே பூமர் மனநிலையில் உள்ள சிலர் ஆதரிக்கவும் மாற்று கருத்துள்ளவர்கள் எதிர்க்கவும் செய்துள்ளார்கள். மறுபடியும் மறுபடியும் பெண்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் இதுபோன்ற கருத்துக்களை எதிர்த்து பெண்ணியவாதிகள் சிலர் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தும் வருகிறார்கள்.























