திரைப்பட தொழிலாளர்கள் வீடு கட்ட விஜய் சேதுபதி நன்கொடை...ஒருத்தரே இத்தனை கோடி கொடுத்திருக்கார்
தென் இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சொந்தமாக வீடு கட்டிக் கொள்ள ரூ 1.30 கோடி ருபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி

ஃபெஃப்சி
திரைத்துறையில் பணியாற்றும் லைட் மேன் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் சங்கம் ஃபெஃப்சி. பிரபல திரைப்பட இயக்குநர் ஆர்.கே செல்வமணி இதன் இயக்குனராக இருந்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படத்திற்கு பின்னும் பல நூற்றுக் கணக்கான தொழிலாளிகளின் அயராத உழைப்பு இருக்கிறது. வெளியில் தெரியும் நட்சத்திரங்களைப் போல் இவர்களுக்கு பெரிய அடையாளமோ பெரிய சம்பளமோ இருப்பதில்லை. படப்பிடிப்புகளின் போது ஏற்படும் விபத்துகளில் பல லைமேன்கள் உயிரிழந்த சம்பவங்களையும் நாம் கேள்விப்பட்டு வருகிறோம்.
தொழிலாளர்களுக்கு 100 ஏக்கரில் நிலம்
திரைப்பட தொழிலாளர்கள் தங்களுக்கென சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளும் விதமாக தமிழ்நாடு அரசால் கடந்த 2006 - 2011 ஆட்சிகாலத்தில் அரசு சார்பாக 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் பையணூர் அருகே ஆயிரம் தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்ளும் விதமாக 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்கு உள்ளாக வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் நிலம் திரும்ப பெறப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது. ஆட்சி மாற்றம் மேலும் பல காரணங்களால் தொழிலாளர்கள் அங்கு வீடு கட்டிகொள்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கொடுக்கப்பட்ட நிலம் அரசால் திரும்ப பெறப்பட்டது. தமிழ்நாடு முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றப் பின் தொழிலாளர்களுக்கு நிலம் திரும்ப தர வேண்டும் என ஃபெஃபசி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. பல்வேறு ஆலோசனைக்குப் பின் கடந்த 21 ஆம் தேதி தொழிலாளர்களுக்கு மீண்டும் வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
விஜய் சேதுபதி நன்கொடை
மூன்று வருட காலத்திற்குள் 1000 வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பல தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் வசதி இல்லை. ஒரு வீடு கட்டுவதற்கு 2.20 லட்சம் தேவைப்படும் என்றும் இந்த வீடுகளை கட்டிமுடிக்க திரைப்பட நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி 1 கோடி 30 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். ஒரு தொழிலாளிக்கு 50 ஆயிரம் வீதம் 250 தொழிலாளர்களுக்கு இந்த பணத்தை அவர் வழங்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஃபெஃப்சி அமைப்பு நன்றி தெரிவித்தது மட்டுமில்லாமல் இந்த இடத்தில் கட்டப்போகும் ஆறு அடுக்குமாடி கட்டிங்களில் ஒரு கட்டிடத்திற்கு விஜய் சேதுபதி டவர்ஸ் என பெயர் வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

