Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
கள்ளக்குறிச்சி அருகே உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின் பாதை அமைப்பதற்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்த மரங்கள் இயந்திரங்கள் மூலம் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டன. இதில் மரத்தை வளர்த்தவர் மரங்களைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுத சம்பவம் கண்கலங்க வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம், வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வி. கணவரை விபத்தில் இழந்த இவர், தனது மகனும் பல் மருத்துவருமான பாலமுருகனுடன் இணைந்து, இயற்கை முறையில் பல்வகை பண்ணையை உருவாக்கி பராமரித்து வந்தார்.
அப்பாவின் நினைவாகவும், சமூக அக்கறையுடனும் வளர்க்கப்பட்ட மா, தேக்கு, மகோகனி, பப்பாளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மரங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிலத்தில் பயிரிடப்பட்டு வந்தன.
இந்நிலையில், தியாகதுருகம் பகுதியில் உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின் பாதை அமைப்பதற்காக, அதிகாரிகள் இவர்களது நிலத்தை ஆய்வு செய்தனர். மரங்களுக்கு இடையூறு இல்லாதவாறு மின் பாதையை சற்று தள்ளி அமைக்க வேண்டும் என செல்வி கோரிக்கை விடுத்திருந்தார்.
அதிகாரிகளும் மாற்று வழி செய்வதாக உறுதியளித்திருந்த நிலையில், தற்போது முறையான ஒப்புதலோ அல்லது முழுமையான இழப்பீடோ வழங்கப்படாமல், காவல்துறையினர் அதிரடியாகக் குவிக்கப்பட்டனர். நிலத்தைச் சுற்றி வளைத்த போலீசார், மருத்துவர் பாலமுருகனையும், அவரது தாயாரையும் அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து, அவர்கள் கண்முன்னேயே 100-க்கும் மேற்பட்ட மரங்கள் இயந்திரங்கள் மூலம் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டன. மரங்களைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுத செல்வியை, போலீசார் இரக்கமின்றி குண்டுகட்டாக தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கண்ணீருடன் பேசிய செல்வி, அதிகாரிகளும் போலீசாரும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டனர். அரசாங்கம் ஒருபுறம் மரம் நடும் திட்டங்களை ஊக்குவிக்கும் வேளையில், 10 ஆண்டுகள் வளர்த்த மரங்களை இப்படி அழிப்பது சமூகத்திற்கே பெரும் கேடு என வேதனையுடன் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















