ஒலிம்பிக் பதக்கத்தை விற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவிய போலந்து வீராங்கனை!
கடந்த 2018-ம் ஆண்டு, ஒருவித எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் அதிலிருந்து மீண்டு வந்து சர்வதேச விளையாட்டு அரங்கில் தடம் பதித்தவர் மரியா.
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பிரமாண்டமாகவும், பாதுகாப்பான முறையிலும் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று முடிந்தது. இந்த ஒலிம்பிக் தொடர் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற போலாந்து நாட்டைச் சேர்ந்த மரியா ஆண்ட்ரிஜெக், அதே நாட்டைச் சேர்ந்த 8 மாத குழந்தையின் அறுவை சிகிச்சை செலவுக்காக தனது பதக்கத்தை ஏலம் விடுத்துள்ளார். மரியாவின் இந்த செயல், உலக ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்று வருகின்றது.
Maria Andrejczyk wins the #Silver medal in women's javelin!#StrongerTogether | @Tokyo2020 | #WorldAthletics pic.twitter.com/BQu6bDXtHb
— Olympics (@Olympics) August 6, 2021
25 வயதேயான மரியா, இந்த முறை பங்கேற்றிருந்த ஒலிம்பிக் தொடர்தான் அவருக்கு முதல் ஒலிம்பிக். கடந்த 2018-ம் ஆண்டு, ஒருவித எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் அதிலிருந்து மீண்டு வந்து சர்வதேச விளையாட்டு அரங்கில் தடம் பதித்தவர். படிப்படியாக ஈட்டி எறிதல் விளையாட்டில் முன்னேற்றம் கண்ட அவர், தான் பங்கேற்றிருந்த முதல் ஒலிம்பிக் தொடரிலேயே பதக்கம் வென்று அசத்தினார்.
இந்நிலையில்தான், 8 மாத குழந்தைக்கு இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மரியா, “நல்லதொரு பணிக்காக பதக்கத்தை ஏலம் விட வேண்டும் என நினைத்திருந்தேன். எனவே, சட்டென்று முடிவெடுத்துவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு, 1.5 மில்லிய யூரோ டாலர்கள் தேவைப்பட்ட நிலையில், 90% நிதி திரட்டப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மரியா விடுத்த ஏலத்தை வென்ற சப்கா போல்ஸ்கா என்ற நிறுவனம், 140,000 யூரோ டாலர்களை அளித்து பதக்கம் வேண்டாம் என மரியாவுக்கே திரும்ப கொடுத்துவிட்டது. மரியாவின் உதவியையும், ஏலத்தில் வென்று பதக்கத்தை திருப்பி கொடுத்த நிறுவனத்திற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.