Vikravandi constituency: நாடாளுமன்றத் தேர்தலோடு வருகிறதா விக்கிரவாண்டி இடைத்தேர்தல்? - சாகு அளித்த விளக்கம்
Vikravandi constituency விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவதற்கு முன்பாக விக்கிரவாண்டிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் திமுகவைச் சேர்ந்த புகழேந்தி. கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழுப்புரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த போது அவருக்கு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 6-ம் தேதி காலை பத்து மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உயிரிழந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது. தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அன்றைய தினமே, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Before You Go
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















