OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
அதிமுக-வால் ஓரங்கட்டப்பட்டு திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் ஆட்சி அமைந்தால் சபாநாயகர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் விசுவாசி என்று மக்களால் அறியப்பட்டு வந்தவரும், முன்னாள் முதலமைச்சர், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று திமுக-வில் இணைந்தார். இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண டீக்கடைக்காராக தனது வாழ்வைத் தொடங்கிய பன்னீர்செல்வத்தை சேர்மன், எம்.எல்.ஏ., அமைச்சர், முதலமைச்சர் ஆகிய பதவிகள் கொடுத்த அதிமுக-விற்கு அவர் செய்த துரோகம் என்று அதிமுக தொண்டர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி?
அரைநூற்றாண்டு காலம் அதிமுக-வின் அங்கமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திமுக-வில் இணைவதற்கு சில கோரிக்கைகளை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்துள்ள நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும் என்று கருதப்படுகிறது. கட்சி ரீதியாகவும் அவருக்கு முக்கிய பொறுப்பு ஒன்று வழங்கவும் தலைமை ஆலோசித்து வருகிறது. தற்போது வரை வெளியாகிய கருத்துக்கணிப்புகளின்படி, திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, திமுக-வில் ஓ.பன்னீர்செல்வம் தன்னை இணைத்துக் கொண்டார்.
மேலும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பனுக்கும் உசிலம்பட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கருதப்படுகிறது. இதுதவிர, ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் எம்பி-யுமான ரவீந்திரநாத்திற்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அல்லது மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சரிந்த செல்வாக்கு?
ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் அவருக்கும் அவரது மகனுக்கும் அரசியல் ஆதாயங்கள் அளிக்கும் என்றே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், மக்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளால் அவரது செல்வாக்கு பன்மடங்கு சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் அவரது முக்குலத்தோர் சமுதாயத்தினர் மத்தியில் பன்மடங்கு அவரது செல்வாக்கு சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏனென்றால், எம்ஜிஆர் முக்குலத்தோர் சமுதாயம் அதிகம் உள்ள மதுரை மேற்கு, ஆண்டிப்பட்டி தொகுதியிலும், ஜெயலலிதா போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால், தென் தமிழகத்திற்கும் அதிமுக-விற்கும் ஒரு தனிப்பந்தம் உள்ளது. தினகரனும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு தென் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், அவர் சார்ந்த முக்குலத்தோர் சமுதாய மக்கள் மத்தியில் கொந்தளிப்பையுமே உண்டாக்கியுள்ளது.
பதில் சொல்லும் தேர்ல் முடிவுகள்:
சட்டசபைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு அவருக்கு பலமாக அமையுமா? அல்லது பலவீனமாக அமையுமா? என்பதை தேர்தல் முடிவுகள் மூலமாகவே அறிய முடியும். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பலரும் ஏற்கனவே பிரிந்து திமுக-விலும், எடப்பாடி பழனிசாமியிடமும் தஞ்சம் அடைந்த நிலையில் இறுதியாக ஓ.பன்னீர்செல்வமும் திமுக-விடம் தஞ்சம் அடைந்துள்ளார்.
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















