“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
தேர்தல் காலங்களில் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது வழக்கமான ஒன்றே. அதனால் தேர்தல் முடிவில் பெரிய மாற்றம் ஏற்படாது - ப.சிதம்பரம்

“ஒரு படைவீட்டிற்கு மட்டும் அல்லாமல் ஆறுபடை வீடுகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி செல்ல வேண்டும்” என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்
சிவகங்கை அருகே கீழப்பூங்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சி.ஆர்.சுந்தர்ராஜன் தனது சொந்த நிதியில் மேற்கொண்ட மக்கள் நலப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமை தாங்கி, முடிவடைந்த பணிகளை திறந்து வைத்தார். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பா.சிதம்பரத்திடம், பிரதமர் மோடி மதுரை வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “மோடி வரட்டும், சாமி கும்பிட்டு செல்லட்டும்” என்று தெரிவித்தார். தி.மு.க.–காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அது சுமுகமாக முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். மேலும், தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி என்பது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரால் உருவாக்கப்பட்ட வெற்றிகரமான கூட்டணி என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மதுரை வருகை குறித்து மீண்டும் கருத்து தெரிவித்த அவர், ஒரு படைவீட்டிற்கு மட்டும் அல்லாமல் ஆறுபடை வீடுகளுக்கும் செல்ல வேண்டும் என்றும் கூறினார். மத்திய அரசு அறிவிக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்கள் குறித்து பேசிய பா.சிதம்பரம், திட்டங்கள் அறிவிக்கப்படுவது மட்டும் போதாது, அவை நடைமுறையில் அமல்படுத்தப்படுகிறதா என்பதே முக்கியம் என்று தெரிவித்தார். தேர்தல் காலங்களில் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது வழக்கமான ஒன்றே என்றும், அதனால் தேர்தல் முடிவில் பெரிய மாற்றம் ஏற்படாது என்றும் அவர் கூறினார். இந்தியா கூட்டணி பலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.






















