Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
67 ஆண்டு காலமாக ரஞ்சி கிரிக்கெட் ஆடி வரும் ஜம்மு காஷ்மீர் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடர் ரஞ்சி கிரிக்கெட் தொடர். ஐபிஎல் தொடருக்கு முன்பு இந்திய அணியில் இடம்பிடிக்க ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடினால் மட்டுமே முடியும்.
ரஞ்சி இறுதிப்போட்டி:
ரஞ்சி கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் மும்பை ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், நடப்பாண்டிற்கான ரஞ்சி தொடரின் இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக ஜம்மு - காஷ்மீர் தகுதி பெற்றிருந்தது. இவர்களுடன் கர்நாடக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கர்நாடகாவின் ஹுப்ளியில் நடந்த இந்த இறுதிப்போட்டியில் ஜம்மு காஷ்மீரை எளிதில் வீழ்த்தி கர்நாடகா கோப்பையை வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், கருண் நாயர் போன்ற அனுபவசாலிகள், விஜயகுமார் வைஷாக், பிரசித் கிருஷ்ணா போன்ற திறமையான பந்துவீச்சாளர்கள் இருந்தனர்.
மிரட்டிய ஜம்மு காஷ்மீர்:
ஆனால், இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆடிய ஜம்மு காஷ்மீர் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் இக்பால் 6 ரன்னில் அவுட்டானலும், யாவீர் ஹாசன் 88 ரன்களும், கேப்டன் பராஸ் டோக்ரா 70 ரன்களும் எடுக்க சுபம் பண்டிர் 121 ரன்களும் விளாசினார். மிடில் ஆர்டரிலும் அப்துல் சமல் 61 ரன்களும், கங்கையா 70 ரன்களும் ஷாகில் லோத்ரா 72 ரன்களும் எடுக்க முதல் இன்னிங்சில் 584 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, நெருக்கடியுடன் முதல் இன்னிங்சைத் தொடங்கிய கர்நாடக அணிக்கு கே.எல்.ராகுல் 13 ரன்னிலும், கேப்டன் தேவ்தத் படிக்கல் 11 ரன்னிலும், கருண் நாயர் டக் அவுட்டாக மயங்க் அகர்வால் 160 ரன்கள் விளாசியும் 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஃபாலோ ஆன் வழங்காமல் 2வது இன்னிங்சிலும் அசத்தலான பேட்டிங்கை ஜம்மு காஷ்மீர் ஆடியது.
முதல் பட்டம்:
அந்த அணிக்காக இக்பால் 160 ரன்களும், ஷாகில் லோத்ரா 101 ரன்களும் எடுக்க 4 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்டது ஜம்மு காஷ்மீர். போட்டி நாட்கள் 5 நாட்கள் முடிந்த நிலையில், இந்த போட்டி டிரா ஆனது.
ரஞ்சி கிரிக்கெட் விதிப்படி, இறுதிப்போட்டியில் முடிவு கிடைக்காவிட்டால் எந்த அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெறுகிறதோ, அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதன்படி, கர்நாடகாவை காட்டிலும் 291 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்த ஜம்மு காஷ்மீர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
67 ஆண்டுகால காத்திருப்பு:
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் தீவிரவாத பிடியில் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர்கள் ரஞ்சி கிரிக்கெட்டில் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். ரஞ்சி கோப்பையை வெல்லும் 19வது அணி என்ற பெருமையையும் இதன்மூலம் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
இந்த வெற்றி குறித்து ஜம்மு காஷ்மீர் கேப்டன் கூறியதாவது, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் பற்றி தெரியாத பலருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. வெற்றி, தோல்வி விளையாட்டில் ஒரு பாகமே. ஆனால், இறுதிப்போட்டியில் விளையாடுவதே சிறப்பாகும். இப்போது நிறைய பேர் எங்களைப் பின்தொடர்கிறார்கள். கிரிக்கெட்டிற்கு ஏற்ற சூழல் அதிகரித்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார். 1959-60 சீசன் முதல் ரஞ்சி கிரிக்கெட் ஆடி வரும் ஜம்மு காஷ்மீர் அணி வெல்லும் முதல் பட்டம் இதுவே ஆகும். அவர்களின் 67 ஆண்டுகால காத்திருப்பு இதன்மூலம் முடிவுக்கு வந்துள்ளது.




















