Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அவர் போட்டியிடுவதற்கான ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக நான் போட்டியிடப் போகிறேன் என முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல்
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறை திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, புரட்சிப்பாரதம் கட்சி ஆகியவை உள்ளது. அதேசமயம் திமுக கூட்டணியில் தேமுதிக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை, கொங்குநாடு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது.
இந்த பிரமாண்ட கூட்டணி தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் 234 தொகுதிகளில் எப்படி கூட்டணி கட்சிகளுக்கு பங்கீடு நடைபெறப் போகிறது என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.
தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே திமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில் ஒவ்வொரு கட்சியும் கடந்த முறை தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளை விட அதிக எண்ணிக்கையில் இடம் கேட்பதால் சிக்கல் எழுந்துள்ளது. ஆனால் ஆட்சியை தக்க வைப்பதில் திமுக உறுதியாக இருப்பதால் குறைந்தது 170 இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது.
அதேசமயம் கறார் காட்டும் கூட்டணி கட்சிகளிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி கேட்பதை விட, முடிந்தவரை கடந்த தேர்தலில் பெற்றதை விட குறைவான இடங்களில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
தேர்தலில் போட்டியிடும் கருணாஸ்
இந்த நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அவர் போட்டியிடுவதற்கான ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் போட்டியிட்ட கருணாஸ் திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். 2016ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவுடனான கூட்டணியில் இருந்து பிணக்கு ஏற்பட்டு 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் விலகினார். தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு கருணாஸ் ஆதரவளித்தார். இப்போது 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவது உறுதி என கூறியுள்ளார்.
234 தொகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எது கொடுத்தாலும் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை எல்லாம் சொல்லி வாக்கு கேட்டு போட்டியிட்டு வெற்றி பெறுவேன். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவேன் எனவும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















