தஞ்சாவூரில் சிறுவன் தற்கொலை: போதை மறுவாழ்வு மையத்தில் நடந்த சோகம்! அதிர்ச்சியில் தஞ்சை மக்கள்
சிறுவன் வெளியில் செல்ல முடியாததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். தான் தங்கியிருந்த அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டி மைக்கேல் நகர் பகுதியில் இயங்கி வரும் குழந்தைகளுக்கான போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுவன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் சீனிவாசநல்லூர் பகுதியை சேர்ந்த முருகனின் மகன் 15 வயது சிறுவன். இவருக்கு பெற்றோர் இல்லை. பாட்டி பராமரிப்பில் இருந்து வந்த சிறுவன் தஞ்சாவூரில் புதுக்கோட்டை ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிறுவர்கள் பராமரிப்பு இல்லத்தில் தங்கி மேம்பாலம் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 15ம் தேதி மாலை அந்த 15 வயது சிறுவன் தான் தங்கியிருந்த சிறுவர்கள் இல்லத்தின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த பொருளை திருட முயற்சி செய்துள்ளார். இது அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்துள்ளது. தொடர்ந்து கார் உரிமையாளர் இது சம்பந்தமாக இல்லத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மறுநாள் ஜூலை 16ம் தேதி காலை 11.30 மணியிலிருந்து அந்த சிறுவனை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அன்று இரவே போலீசார் அந்த சிறுவனை கண்டுபிடித்து இல்ல காப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தொடர்ந்து இல்ல காப்பாளர் குழந்தைகள் நலவாரிய அதிகாரிகளிடம் அந்த சிறுவனை ஒப்படைத்துள்ளார். இதையடுத்து குழந்தைகள் நலவாரிய அதிகாரிகள் திருக்கானூர்பட்டியில் இயங்கி வரும் குழந்தைகளுக்கான போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் கடந்த 18ம் தேதி அந்த சிறுவனை சேர்த்துள்ளனர். அங்கு தங்கியிருந்த சிறுவன் வெளியில் செல்ல முடியாததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் தான் தங்கியிருந்த அறையில் சிறுவன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





















