இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
தஞ்சாவூரில் விறகு கடைகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பல விறகு கடைக்காரர்கள் வழக்கமாக விற்ற விலையை விட கூடுதலாக விலை கூறியதால் உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள உணவகங்களில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவு வகைகள் பல குறைக்கப்பட்டுள்ளன. மேலும் பல கையேந்தி பவன்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வெளி மாவட்டம், மாநிலத்தில் இருந்து தஞ்சாவூரில் தங்கியுள்ள கூலித் தொழிலாளர்கள், பேச்சிலர்கள் அவதியடைந்துள்ளனர்.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நிலவும் போர் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை போன்ற மாநகரங்களில் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன.
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள உணவகங்கள், சிற்றுண்டிகள், டீக்கடைகளில் 2 நாட்களுக்கு தேவையான சமையல் எரிவாயு உருளைகள் கையிருப்பில் உள்ளதால், நேற்று வரை தட்டுப்பாடு பிரச்னை ஏற்படவில்லை.
இருப்பினும் சில சிறிய மற்றும் பெரிய உணவகங்களில் கையிருப்பிலுள்ள சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்தும் விதமாக, எரிபொருள் அதிமாகச் செலவாகக்கூடிய உணவு வகைகள் நேற்று நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக உணவகங்களின் முகப்பில் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள துண்டறிக்கையில், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எங்கள் உணவு வகைகளில் (மெனுவில்) உள்ள அனைத்து பொருள்களையும் வழங்க முடியவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மட்டுமே கிடைக்கும். சூழ்நிலையால் ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் வருந்துகிறோம்.
மேலும், புரிதலையும், ஒத்துழைப்பையும் கேட்டுக் கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில உணவகங்களில், குறைந்த அளவிலான உணவு வகைகள் மட்டுமே வழங்கப்படலாம் என்றும், உணவக திறப்பு, மூடும் நேரங்களில் சில மாற்றங்கள் இருக்கலாம் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நேற்றைய நிலையை விட இட்லி, தோசை போன்ற உணவுகள் மட்டுமே கிடைத்தன. தள்ளுவண்டிகளில் வைத்து காலையில் டிபன் மதிய நேரத்தில் தயிர், லெமன், புளிசாதம், தக்காளி சாதம் விற்பனை செய்து வந்த கடைகள் இன்று திறக்கப்படவில்லை.
இவற்றை நம்பி வாழ்க்கையை நடத்தி வருபவர்கள் மிகவும் ஏமாற்றத்திற்கும், பட்டினிக்கும் உள்ளாகினர். வெளி மாவட்டம், மாநிலத்தில் இருந்த தஞ்சாவூருக்கு கூலி வேலை உட்பட பல பணிகளில் ஈடுபட்டுள்ள வாலிபர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். பலர் டீக்கடைகளில் பன் மற்றும் டீயை மட்டும் சாப்பிட்டு வேலைக்கும் சென்றதையும் காண முடிந்தது.
பல உணவகங்களில் வழக்கமாக வழங்கப்படும் உணவு வகைகளில் பல குறைக்கப்பட்டதால், விரும்பிய வகைகள் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு சூழ்நிலையைப் புரிந்து கொண்டு சாப்பிட்டுச் சென்றனர்.
நடுத்தர உணவகங்கள், சிற்றுண்டிகளில் வழக்கம்போல நேற்று உணவு வகைகளைக் குறைக்காமல் வழங்கப்பட்டன. இதனிடையே, நடுத்தர உணவகங்கள், சிற்றுண்டிகளில் எரிவாயு உருளைகள் கையிருப்பில் இருந்தாலும், விறகு அடுப்புகளைப் பயன்படுத்துவதற்கும் ஆயத்தமாகி வருகின்றன. சில கடைகளில் விறகு அடுப்புகளை வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மேலும், புதிய விறகு அடுப்புகளை வாங்குவதற்கு ஆர்டர்கள் கொடுத்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் தற்போது விறகு கடைகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பல விறகு கடைக்காரர்கள் வழக்கமாக விற்ற விலையை விட கூடுதலாக விலை கூறியதால் உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் முன்பதிவு செய்வதற்காக கைப்பேசி மூலம் முயற்சி செய்கின்றனர். ஆனால், தொடர்பு எண் கிடைக்காததால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.























