சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் 'இல்லீகல் கேங்' தலைவன் ஆகாஷ் நீல்கந்த் என்பவரை திருமணத்தின் போது காவல்துறையினர் கைது செய்தனர்.
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
Gangster Marriage: கல்யாண மண்டபத்திற்குள் நுழைந்து கேங்ஸ்டர் மாப்பிள்ளையை கைது செய்த சம்பவம் போபாலில் அரங்கேறியுள்ளது.

- திருமண மண்டபத்தில் கேங்ஸ்டர் மாப்பிள்ளையை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
- மணப்பெண் சீமா, திருமணத்திற்காக இரண்டு மணி நேரம் மாப்பிள்ளையை விடுவிக்க கோரிக்கை வைத்தார்.
- காதல் திருமணம் செய்துகொள்ளவிருந்த நிலையில், கடத்தல் வழக்கில் மாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார்.
- கொலை, கடத்தல் என 31 வழக்குகள் மாப்பிள்ளை ஆகாஷ் மீது நிலுவையில் உள்ளன.
Gangster Marriage: திருமணம் முடியும் வரை மாப்பிள்ளையை கைது செய்ய வேண்டாம் என மணமகள் அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்:
திருமண கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்துகொண்டிருந்த மண்டபத்திற்குள் நுழைந்த போலீசார், கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தட்டி தூக்கிய அதிரடி சம்பவம் மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றுள்ளது. அடுத்த சில மணி நேரங்களிலேயே மருதாணி சிவந்த கைகளுடன் காவல்நிலையத்திற்கு வந்த மணப்பெண், முன்வைத்த கோரிக்கை அங்கிருந்த நபர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மணக்கோலத்தில் கதறி அழுத பெண்:
மணக்கோலத்தில் காவல்நிலையத்தில் கதறி அழுத சீமா எனும் அந்த பெண், “அய்யா, என் வாழ்க்கையே சீரழிந்துவிடும். இதில் என் தவறு என்ன இருக்கிறது? அவர் செய்த குற்றங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், உறவினர்கள் அனைவரும் வந்து அங்கு காத்துக்கொண்டிருக்கின்றனர். ஹல்தி உள்ளிட்ட பல சடங்குகள் நடந்து முடிந்து விட்டன. எனது வருங்கால கணவரான ஆகாஷை இரண்டு மணி நேரத்திற்காவது விடுவியுங்கள். எங்களது திருமணம் நடைபெறுவதற்கு உதவுங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவிக்கவே, மீதமுள்ள திருமணம் சடங்குகளை காவல்நிலையத்திலேயே முடிக்கவாவது அனுமதி கொடுங்கள் என கோரி காவலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார். ஆனால், காவல்துறையினர் அதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது?
சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வரும் ஆகாஷ் நீல்கந்த் என்பவரது திருமணம் நடைபெறுவதாக அறிந்து, புதன்கிழமை பிற்பகல் குறிப்பிட்ட மண்டபத்திற்கு சென்று அங்கேயே வைத்து அவரை கைது செய்துள்ளனர். திருமணத்தின் கடைசி சில சடங்குகள் மட்டுமே இருந்த நிலையில், காவதுறையினரால் மாப்பிள்ளை அழைத்துச் செல்லப்பட்டதை கண்டு உறவினர்கள் அதிர்ந்துள்ளனர். அவரோடு சேர்த்து ராஜாம்ஜி தாகூர், அபிஷேக் உபத்யாய், அபிஷேக் மீனா, நீரஜ் காங்கே மற்றும் அமித் ஓஸ்வால் ஆகிய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருமே நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்றப்பின்னணி என்ன?
இல்லீகல் கேங் என்ற பெயரில் அறியப்பட்ட ஆகாஷின் கும்பல், கடந்த 2018ம் ஆண்டு முதல் போபாலில் இயங்கி வந்துள்ளது. காவல்துறை தகவலின்படி அந்த கும்பலானது, வாஜ்பாயி நகர் பகுதியை சேர்ந்த 50க்கும் அதிகமான இளைஞர்களை உள்ளடக்கியுள்ளது, அவர்கள் அனைவரும் தங்களது கழுத்தில் இல்லீகல் என பச்சை குத்தி கும்பலுக்கான விசுவாசத்தை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த கும்பலுக்கான தலைவனான ஆகாஷ் சராசரியான குற்றவாளி கிடையாது என்றும், கொலை போன்ற தீவிரமான சம்பவங்கள் தொடர்பான 31 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளனவாம். பாஜக பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கிலும் அவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் 4 மாதங்களுக்கு முன்பாக ஜாமினில் வெளியாகும் முன்பு, 18 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். சாமியார் ஒருவரை கடத்தி பணம் பறிப்பு முயற்சி மேற்கொண்டது தொடர்பான வழக்கில் தற்போது ஆகாஷ் கைது செய்யப்பட்டுள்ளாராம். ஆகாஷ் மற்றும் சீமா கடந்த 6 வருடங்களாக காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வருவதும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Frequently Asked Questions
திருமணத்தின் போது மாப்பிள்ளையை காவல்துறை ஏன் கைது செய்தது?
மணப்பெண் காவல் நிலையத்தில் என்ன கோரிக்கை வைத்தார்?
தனது திருமணம் நடைபெற ஏதுவாக, மாப்பிள்ளையை இரண்டு மணி நேரமாவது விடுவிக்க வேண்டும் என்று மணமகள் சீமா காவல் நிலையத்தில் கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்.
கைது செய்யப்பட்ட மாப்பிள்ளை மீது என்ன குற்றச்சாட்டுகள் உள்ளன?
ஆகாஷ் மீது கொலை உள்ளிட்ட 31 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், ஒரு பாஜக பிரமுகர் கொலை வழக்கிலும், சாமியார் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது.
'இல்லீகல் கேங்' அமைப்பு பற்றி என்ன கூறப்படுகிறது?
ஆகாஷின் 'இல்லீகல் கேங்' அமைப்பு 2018 முதல் போபாலில் செயல்பட்டு வருகிறது. இந்த கும்பலில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழுத்தில் 'இல்லீகல்' என பச்சை குத்தி விசுவாசம் காட்டி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























