தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், கோயிலில் உள்ள சிலைகளின் பாதுகாப்பிற்காகவும் பெருவுடையார் சன்னதியில் சிசிடிவி கேமரா தற்போது பொருத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் கண்காணிப்பு பணிக்காக பெருவுடையார் சன்னதியில் புதிதாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்களுக்காக இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பெரியகோயிலில், குறிப்பாக பெருவுடையார் சன்னதி மற்றும் கோபுரப் பகுதிகளில் கூட்ட நெரிசலை முறைப்படுத்தவும் பாதுகாப்பை பலப்படுத்தவும் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் தமிழர்களின் கட்டடக்கலைக்கும், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாகும். மேலும் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாகவும் தஞ்சை பெரிய கோயில் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலுக்கு தினமும் உள்நாடு, வெளிநாடு, வெளி மாநிலம், வெளிமாவட்டம் என ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளும், ஆய்வு மாணவர்களும் வந்து கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் பல்வேறு மாவட்ட பள்ளி மாணவர்கள், மாணவிகளை சுற்றுலாவிற்காகவும் தஞ்சை பெரியகோயிலுக்கு அழைத்து வருகின்றனர்.
இதேபோல் தொடர் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள், பொதுமக்கள் தங்களின் குடும்பத்தினருடன் வருகின்றனர். அப்போது பெரிய கோயில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூட இடமில்லாத நிலை ஏற்படும். இத்தகைய பெருமை வாய்ந்த பெரிய கோயில் நுழைவுவாயிலில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறையினர் கோவிலை பராமரித்து வருகின்றனர். இந்த கோயிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சை பெரியகோயிலில் தற்போது கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ராஜராஜன் கோபுர நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் வைக்கப்பட்டு பக்தர்கள் சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். தஞ்சை பெரியகோயிலில் ஐம்பொன் சிலைகள் பல உள்ளது.
பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், கோயிலில் உள்ள சிலைகளின் பாதுகாப்பிற்காகவும் பெருவுடையார் சன்னதியில் சிசிடிவி கேமரா தற்போது பொருத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க நடராஜர் மண்டபம் அருகே டிவி பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா கூறுகையில், தஞ்சை பெரிய கோயிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அறநிலைத்துறை சார்பில் ரூ. 66,000 மதிப்பீட்டில் 8 புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தொடர் கண்காணிப்பில் இருக்கும். தஞ்சை அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் 88 கோயில்கள் உள்ளது.
இந்நிலையில் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோயில்களில் இருந்தும் உண்டியல் காணிக்கையாக 64 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. அதனை உருக்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 25ம் தேதி மாரியம்மன் கோவில் அருகே உள்ள கைலாசநாதர் திருக்கோயில் மற்றும் பெண்ணாற்றங்கரை பகுதியில் உள்ள காளகஸ்தர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















