கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை உக்கடம் பேருந்து நிலையம் 13 கோடி ரூபாய் மதிப்பில் நவீனமயமாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 3.27 ஏக்கரில் உக்கடம் பேருந்து நிலையம் ஒன்றாவது முனையம் அமையப் பெற்றுள்ளது.
கோவையில் பல்வேறு திட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு பணிகள் புதிதாக துவங்குவதற்கு அடிக்கல் நாட்டும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாநகராட்சி பகுதியில் முடிவுற்ற மூன்று திட்டப் பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி கோவை உக்கடம் பேருந்து நிலையம் 13 கோடி ரூபாய் மதிப்பில் நவீனமயமாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 3.27 ஏக்கரில் உக்கடம் பேருந்து நிலையம் ஒன்றாவது முனையம் அமையப் பெற்றுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் வணிக வளாகங்கள், கழிவறை வசதி, காத்திருப்பு இருக்கைகள், பொது WiFi வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான தளங்கள், சிசிடிவி கேமராக்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட வசதிகளும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தனியாக ஓய்வு எடுக்கும் அறைகளும் உள்ளன. மேலும் கவுண்டம்பாளையம் மற்றும் கணபதி மாநகர் ஆகிய இரண்டு பகுதிகளிலும் 3.36 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகமும் திறந்து வைக்கப்பட்டது.
கோவை மேற்கு புறவழிச்சாலை முதல்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை தமிழ்நாடு முதல்வர் மு. க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கோவை மாநகரில் போக்குவரத்து நெருசலை குறைக்கும் வகையில் கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை சுமார் 32.43 ம் தொலைவிற்கு மூன்று கட்டங்களாக மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. மூன்று கட்டங்களாக துவங்கிய இந்தப் பணிக்காக சுமார் ரூ.900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோவை மதுக்கரை மைல்கல் பகுதியிலிருந்து மாதம்பட்டி வரை ரூ.250 கோடி மதிப்பீட்டில் 11.8 கிலோமீட்டர் தொலைவிற்க்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை தமிழ்நாடு முதல்வர் மு. க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இரண்டாம் கட்டமாக மாதம்பட்டி முதல் கணுவாய் வரையில் 12.10 கிலோமீட்டர் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் சாலை அமைக்கும் பணிகள் துவங்க உள்ளது. முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு மேற்கு புறவழிச்சாலை திறக்கப்பட்டுள்ளதால் பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் இருந்து பேரூர் மற்றும் சிறுவாணி சாலைக்கு செல்வோர் புறவழி சாலையை பயன்படுத்திக் கொள்ளவதால் போக்குவரத்து நெரிசல் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.























