Selvaperunthagai: திமுக ஜெயித்தால் நாங்கள் தான் எதிர்க்கட்சி.. செல்வப்பெருந்தகை போடும் கணக்கு!
ராகுல் காந்தியின் இலக்கு மேற்கு வங்கத்திலும், அசாம் மாநிலத்திலும் இருந்தது. தமிழ்நாட்டில் ராகுல்காந்திக்கு திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என தெரியும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

ராகுல்காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மீது எந்தவொரு கோபமும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் ஓய்வில் உள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு போன்றோர் கொடைக்கானல் சென்றுள்ளனர். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையும் கொடைக்கானலில் உள்ளார். நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், பரப்புரையில் ஒரே மேடையில் ராகுல் காந்தியும், முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்துக் கொள்ளாதது சர்ச்சையாக மாறியுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக உங்கள் விளக்கம் என்ன? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, அது சர்ச்சையும் கிடையாது, திட்டமிடுதலும் கிடையாது. 5 மாநில தேர்தல் நடைபெற்றது. ராகுல் காந்தியின் இலக்கு மேற்கு வங்கத்திலும், அசாம் மாநிலத்திலும் இருந்தது. தமிழ்நாட்டில் ராகுல்காந்திக்கு திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது உறுதி, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பதவியேற்பார் என்பது தெரியும். ஆனால் காங்கிரஸ் கட்சியின் போட்டி என இருப்பது மேற்கு வங்கமும், அசாமும் தான். கேரளாவிலும் நாங்கள் ஆட்சியமைக்கப் போகிறோம். அங்கு முன்னாடி ராகுல் காந்தியும், இப்போது பிரியங்கா காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்கள். தமிழ்நாட்டில் அப்படி தேவையில்லை. எல்லாருக்கும் 200 தொகுதிகளுக்கும் மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பது தெரியும்.
ராகுல் காந்தியுடன் நான் ஹெலிகாப்டரில் சென்றபோது பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, நீங்கள் எல்லாரையும் மிரட்டி விலைக்கு வாங்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினை விலைக்கு வாங்க முடியாது. அவர் தமிழ்நாட்டின் குரலாக தலை நிமிர்ந்து நிற்பதாக தெரிவித்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதலமைச்சர் ஸ்டாலினின் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட அனைவரும் ஆளுக்கொரு திசையில் பரப்புரை மேற்கொண்டார்கள். இன்னும் வெகு விரைவில் பதவியேற்பு விழா இருக்கிறது. அதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி போன்றோர் கலந்து கொள்வார்கள்.
ராகுல்காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மீது எந்தவொரு கோபமும் இல்லை. அப்படி இருந்தால் தேர்தல் பரப்புரையில் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார் என ராகுல்காந்தி எப்படி சொல்லியிருப்பார் சொல்லுங்கள்” என செல்வப்பெருந்தகை கூறினார்.
மேலும், எல்லாருக்கும் பெருவாரியான வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பது போல தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இருக்கலாம். ஆனால் மக்களின் நம்பிக்கை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியமைக்கும் என்பது தான் தீர்ப்பாக மாறும். எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் தான் அமையும். நாங்கள் 28 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெறுவோம். எடப்பாடி பழனிசாமி எங்களுக்கும் கீழ் தான் வெற்றி பெறுவார். பொறுத்திருந்து பார்ப்போம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















