ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
Vallakottai Murugan Temple Aadi Krithigai: "வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை தரிசன சிறப்பு ஏற்பாடுகள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது."

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இத்தலத்திற்கு புராண காலத்தில் பகீரத மன்னன், இந்திரன், துர்வாச முனிவர் மற்றும் குருபகவான் ஆகியோர் வந்து வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். பழமையான இத்திருக்கோயிலில் கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வந்து வழிப்படுவோருக்கு புதிய வீடு அமையும் வாய்ப்பு, திருமண பாக்கியம், பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், இத்திருக்கோயிலுக்குத் தொடர்ந்து ஆறு வாரங்கள் வந்து வழிபட்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்த பக்தர்கள் பலர் உள்ளனர்.
கிருத்திகை நட்சத்திரத்தின் சிறப்பும் தல புராணமும்
புராண காலத்தில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து கிளம்பிய ஆறு தீப்பொறிகள் சரவணப்பொய்கை தடாகத்தில் உள்ள தாமரை மலர்களில் விழுந்து ஆறு குழந்தைகளாக அவதரித்தன. இக்குழந்தைகளைப் பார்வதி தேவி ஒன்றாக இணைக்க, முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்தது. சரவணப் பொய்கையில் தோன்றிய அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர் சீராட்டி வளர்த்தனர். முருகப்பெருமானை வளர்த்த இப்பெண்களுக்கு, விண்வெளியில் நட்சத்திரக் கூட்டங்களாய் விளங்கும் வரத்தினைச் சிவபெருமான் அருளினார். இதன் காரணமாகவே மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கிருத்திகை நாளில் வல்லக்கோட்டை முருகன் தோன்றியதாகக் கூறப்படுவதால், அன்றைய தினம் சுவாமிக்குச் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டுப் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கமாகும்.
ஆடி கிருத்திகை திருவிழாவும் சிறப்பு ஏற்பாடுகளும்
இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை உற்சவம் மிக விமரிசையாக நடைபெறும். இதற்காகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவர். இந்த ஆண்டு வியாழக்கிழமையன்று ஆடி பரணியும் ஆடி கிருத்திகையும் ஒருசேர வருவதால், கோயிலுக்குப் பெருமளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி எளிதாகச் சுவாமி தரிசனம் செய்யும் வகையில், திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் நிழற்பந்தலுடன் கூடிய கியூ வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், விழா நாளன்று 10,000 நபர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கப்பட உள்ளது. பக்தர்களின் நலன் கருதி திருக்கோயில் வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் அமைக்கவும், தூய்மையைப் பராமரிக்க 3 இடங்களில் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் கண்காணித்திடவும் 25 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டுள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்






















