Vanni Arasu: சூலூர் சம்பவம்.. போலீஸ்காரங்க சிரிக்கவே கூடாதா? - டென்ஷனான அமைச்சர் வன்னி அரசு!
சூலூர் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை, குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி உள்ளிட்டவற்றை கோவை மண்டல ஐஜி ரம்யா பாரதி குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். அப்போது அவர்கள் சிரித்த வீடியோ வைரலானது.

கோவை சூலூர் சிறுமி கொலை தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் சிரித்த நிகழ்வு கடும் சர்ச்சையானது. இந்த விஷயத்தில் அமைச்சர் வன்னி அரசு காவல்துறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சர்ச்சையான பத்திரிக்கையாளர் சந்திப்பு
கோவை மாவட்டம் சூலூரில் கடந்த மே 22ம் தேதி காணாமல் போன 10 வயது சிறுமி, அதற்கு மறுநாள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டாள். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இந்த சூழலில் சிறுமி காணாமல் போனதாக தகவல் கிடைத்தவுடன் பசி, ஓய்வு இல்லாமல் காவல்துறையினர் துரிதமாக விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் 24 மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் மரணம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.
இதற்கிடையில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை, குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி உள்ளிட்டவற்றை கோவை மண்டல ஐஜி ரம்யா பாரதி தலைமையிலான குழுவினர் மே 23ம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். அதுவரை எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்தது.
வைரலான வீடியோ
ஆனால் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடங்குவதற்கு முன்னால் காவல்துறை அதிகாரிகள் சிரித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. சிறுமி மரணத்தால் தமிழ்நாடே சோகத்தில் இருக்கும் நிலையில் உங்களால் எப்படி சிரிக்க முடிகிறது என்றெல்லாம் இணையத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் தாங்கள் வேறு விஷயம் பற்றி பேசிக்கொண்டிருந்ததாக காவல்துறை அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர். இதற்கிடையில் ஐஜி ரம்யா பாரதி பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது தாய்க்கு ஆறுதல் கூறி, எப்போதும் துணையாக காவல்துறை இருக்கும் என தெரிவித்தார்.
போலீசாருக்கு வன்னி அரசு ஆதரவு
இந்த நிலையில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சூலூர் சிறுமி சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் சிரித்து பேசிக்கொண்டிருந்தது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “காவல்துறை அதிகாரிகள் சூலூர் சிறுமி பற்றி பேசுவதற்கு முன், தாங்கள் வேறு விஷயம் பேசிக்கொண்டிருந்ததாக விளக்கம் கொடுத்து விட்டார்கள். சிரிக்கவே கூடாது என சொல்வது எந்தவித நியாயம் என தெரியவில்லை. காவல்துறை அதிகாரிகள் என்றால் முறைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா?.. பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு முன்பு அவர்கள் உரையாடியதை தான் பேசினார்கள். சிறுமி விஷயம் பற்றி பேசவில்லை. அவர்கள் மீது வைக்கப்படுவது அதீத குற்றச்சாட்டாகும். காவல்துறை செயல்பாடுகள் பற்றி பேசுவது சரியானதாக இருக்கும். சிரிப்பது பற்றி பேசுவது சரியா?” என்று அமைச்சர் வன்னி அரசு பதிலளித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















