PM Modi :தமிழ்நாட்டில் திமுக இனி தேடினாலும் கிடைக்காது- பிரதமர் மோடி பேச்சு!
தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் திமுகவை தேடினாலும் கிடைக்காது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு, நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ”திருநெல்வேலி அல்வாவை போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லைய்யப்பர் காந்திமதி அம்மன் நல்லாசி தர வேண்டும். தமிழக மக்கள் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். தேர்தலுக்குப் பின் தமிழ்நாட்டில் திமுக இனி தேடினாலும் கிடைக்காது.
பிரதமர் பதவியில் மீண்டும் அமர்வேன்
மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. மத்திய அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் தமிழக அரசு குறை சொல்கிறது. தமிழகத்தின் வளர்ச்சியைப் பற்றி கேட்டால் திமுகவினரிடம் பதில் இருக்காது. எனக்கு தமிழ்மொழி தெரியாது. ஆனால் தமிழ் மக்களை நேசிக்கின்றேன். சுயநலமிக்கவர்களை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள். திமுகவில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முக்கிய பதவி வகிக்கின்றனர். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி திமுகவும், காங்கிரசும் சம்பாதிக்க நினைக்கிறது. குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். நெல்லை மக்களின் ஆசியோடு பிரதர் பதவியில் மீண்டும் அமர்வேன்”. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நாடு வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நோக்கத்தை நோக்கி பயணித்து வருகிறது. வளர்ச்சி அடைந்த பாரதத்தில் வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டின் பங்கு மகத்துவமானதாக இருக்கும். தூத்துக்குடி, நெல்லையை மையப்படுத்தி பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பாடுபடும்
வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கி உள்ளது. ரூ.4500 கோடி திட்டங்களால் தமிழ்நாட்டின் சாலை வழி தொடர்புகள் மேம்படும். பயண நேரம் குறையும். ஹைட்ரஜன் படகு காசியின் கங்கை ஆற்றில் தன் பயணத்தை தொடங்கவிருக்கிறது. காசிக்கும், தமிழ்நாட்டிற்குமான உறவு மேலும் வலுப்பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”மத்திய அரசு திட்டங்களால் தமிழ்நாடு புதிய சகாப்தத்தை படைக்க உள்ளது. தடைகளை தாண்டி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பாடுபடும். மத்திய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் மறைக்கப்படுகின்றன. திட்டங்கள் குறித்து செய்தித் தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை. மூன்றாது முறையாக நான் ஆட்சி அமைக்கும்போது மோடியின் உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படும்”. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மேலும் படிக்க
Himachal Pradesh: ஹிமாச்சலில் 15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்.. அதிரடி காட்டிய சபாநாயகர்..


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

