Thalaivar Thambi Thalaimaiyil: ”ரியல் பொங்கல் வின்னர்”.. ஹவுஸ்ஃபுல் காட்சிகள்.. தலைவர் தம்பி தலைமையில் படம் சாதனை!
பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் பராசக்தி, கார்த்தியின் வா வாத்தியார் ஆகிய படங்கள் வெளியான போதிலும் தலைவர் தம்பி தலைமையில் படம் அனைவராலும் ரசிக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஜீவா நடித்துள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படம் மிகப்பெரிய அளவில் டிக்கெட் விற்பனையில் சாதனைப் படைத்து வருவதால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளது.
தமிழ் சினிமாவின் இரண்டாம் கட்ட நடிகர்களில் மிக முக்கியமானவர் ஜீவா. பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகனாக இருந்தாலும் தொடர்ந்து 23 ஆண்டுகளாக சினிமாவில் பல வெற்றி, தோல்விகளை கண்டவர். ஆரம்ப காலக்கட்டத்தில் கலகலப்பான வேடங்களில் நடித்து வந்த அவர் கடைசியாக பிளாக், அகத்தியா என சீரியஸான படங்களில் நடித்தார். இது வரவேற்பை பெற்றாலும் பழைய ஜீவாவை பார்க்க ரசிகர்கள் விரும்பினர்.
“தலைவர் தம்பி தலைமையில்”
இப்படியான நிலையில் மலையாளத்தில் பேமிலி படம் எடுத்த நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் “தலைவர் தம்பி தலைமையில்” படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரார்தனா நாதன், தம்பி ராமையா, இளவரசு, ஜென்சன் திவாகர், அனுராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். ஒரு நாள் இரவில் ஒரே இடத்தில் அருகருகே அமைந்திருக்கும் இரு வீடுகளில் இறப்பு மற்றும் திருமணம் நிகழும் நிலையில் அதனால் ஏற்படும் பிரச்னைகளை பஞ்சாயத்து தலைவரான ஜீவா எப்படி தீர்க்கிறார் என்பதே இதன் கதையாகும்.
தலைவர் தம்பி தலைமையில் படம் ஜனவரி 30ம் தேதி முதலில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜயின் ஜனநாயகன் படம் தள்ளிப் போனதால் பொங்கலுக்கு வெளியாகும் என ஜனவரி 12ம் தேதி முடிவானது. அதன்படி ஜனவரி 15ம் தேதி வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குடும்பம், குடும்பமாக ஜீவா படம் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு வர தொடங்கியுள்ளனர்.
2026 பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் பராசக்தி, கார்த்தியின் வா வாத்தியார் ஆகிய படங்கள் வெளியான போதிலும் தலைவர் தம்பி தலைமையில் படம் அனைவராலும் ரசிக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். இந்த படம் டிக்கெட் முன்பதிவிலும் நல்ல சாதனைப் படைத்துள்ளது.
நன்றி தெரிவித்த ஜீவா
இதனிடையே தலைவர் தம்பி தலைமையில் படம் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ஜீவா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “அன்புள்ள அனைத்து சினிமா ரசிகர் நண்பர்களே, என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு படத்தை வழங்குவதன் மூலம் புத்தாண்டைத் தொடங்குவதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். எனது சமீபத்திய வெளியீடான தலைவர் தம்பி தலைமையில் படம் திரையரங்குகளில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடமிருந்தும் அற்புதமான வரவேற்பைப் பெற்று வருகிறது. எப்போதும் போல, உங்கள் தொடர்ச்சியான அன்புக்கும் ஆதரவிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.





















