Geetha Jeevan: சோசியல் மீடியா பயிற்சி வகுப்பு... திமுகவினரை தயார் செய்யும் கீதா ஜீவன்!
நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தது, சமுதாய ரீதியாக வாக்குகள் கிடைத்தது என எல்லாமே தவெகவுக்கு சாதகமாக அமைந்தது. அதைவிட முக்கியமான விஷயம் சமூக ஊடகங்களின் தாக்கம் இருந்தது தான் என கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தவெகவுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் நாமும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட வேண்டும் என முன்னாள் திமுக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 16 அமைச்சர்களும் தோல்வியடைந்தனர். அதில் திமுக முன்னாள் அமைச்சர், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கீதா ஜீவனும் ஒருவர். இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஜெயிக்க சமூக வலைத்தளம் ஒரு காரணமாக அமைந்தது. இதனிடையே தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகர பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கீதா ஜீவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் நாம் அதிகமாக வாக்குகளை இழந்திருக்கிறோம். 2011ல் அதிமுகவில் செல்லபாண்டியன் ஜெயிக்கும்போது நாம் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இருந்தோம். 2026 தேர்தலில் தோல்வியடைந்து 37 ஆயிரம் வாக்குகளை இழந்திருக்கிறோம். இம்முறை அதே செல்லபாண்டியன் 24 ஆயிரம் வாக்குகள் தான் பெற்றார். அதிமுகவின் வாக்குகள் முழுமையாக தவெகவுக்கு சென்று விட்டது. திமுகவைப் பொறுத்தவரை சாதி, மதம் பார்ப்பது கிடையாது. தவெகவில் இருந்து மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் இருப்பதால் அந்த வாக்குகள் உங்களுக்கு கிடைக்காது என சொன்னார்கள். அங்கு எனக்கு 6,700 வாக்குகள் கிடைத்தது. தவெக சார்பில் நின்ற ஸ்ரீநாத்துக்கு 19 ஆயிரம் வாக்குகள் வரை கிடைத்தது.
அதிமுக, நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தது, சமுதாய ரீதியாக வாக்குகள் கிடைத்தது என எல்லாமே தவெகவுக்கு சாதகமாக அமைந்தது. அதைவிட முக்கியமான விஷயம் சமூக ஊடகங்களின் தாக்கம் இருந்தது தான். அது நகரப்பகுதியில் அதிகமாக இருந்தது. இன்றைக்கு குழந்தைகள் வரை செல்போன் இருக்கிறது. தமிழ்நாடு அளவில் தவெக செய்த பரப்புரை, நம் மீது வைத்த குற்றச்சாட்டு, தேர்தல் வாக்குறுதி எல்லாம் செல்போன் வழியாக சென்று சேர்ந்தது.
சிறுவர்களை தேர்தல் பரப்புரையில் பங்கேற்க வைப்பது பெரிய குற்றமாகும். ஆனால் தவெக அதை குற்றம் என தெரியாமல் செய்திருக்கிறார்கள். அந்த வியூகம் நமக்கு தெரியாமல் போனது. தமிழ்நாடு முழுவதும் நம்முடைய எதிரி யார் என தெரியாமல் போனது. திமுகவினர் அதிமுகவை துவைத்து எடுத்ததில் அவர்கள் டெபாசிட் இழந்தனர். நம் உண்மையான எதிரியை பார்க்காமல் விட்டு விட்டோம்.
அதனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைத்தளத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். உங்களுடைய வீட்டில் இருப்பவர்களை பங்கெடுக்க செய்யுங்கள். வீட்டில் இருக்கும் குழந்தைகளை சரி செய்து கொள்கைகளை சொல்லிக் கொடுங்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓடாக உழைத்தார். இந்த தேர்தலில் திட்டங்களை யாரும் பார்க்கவில்லை. சமூக ஊடகம் மூலம் தவெக வெற்றி பெற்றது.
திமுகவுக்கும் தவெகவுக்கும் 3 சதவிகித வாக்கு சதவீத வித்தியாசம் உள்ளது. அக்கட்சி புதிய வியூகத்தை அமைத்துள்ளார்கள். அதற்கேற்ப நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். தவெக ஆட்சியில் நிறைய கூத்து நடைபெறும். அதனையெல்லாம் நாம் பரப்பி விட வேண்டும். எல்லாருக்கும் சமூக வலைத்தளம் பயிற்சி வகுப்பு கூட நான் நடத்த நடவடிக்கை எடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















