சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
சேலம் வடக்கு தொகுதி தவெக MLAவிடம் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக கவுன்சிலர்கள் ரவுண்டுகட்டியதால் தன்னை பேசவிடவில்லை என சொல்லி MLA வெளிநடப்பு செய்தார்.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டம் துவங்கியதுமே அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சேலம் மாநகராட்சியில் குடிநீரை தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் இந்த முடிவை கைவிட சொல்லி விசிக மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் மேயர் இருக்கை முன்பாக அமர்ந்து கூட்டம் முடியும் வரை தர்ணாவில் ஈடுபட்டிருந்தார்.
இதனிடையே சேலம் வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ சிவக்குமார் மாமன்ற கூட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது திமுக மாமன்ற உறுப்பினர்கள் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தவெக நிர்வாகிகள், பணிகளை செய்யுமாறு அரசு அதிகாரிகளை நிர்பந்திப்பதும், ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.
பின்னர் எம்.எல்.ஏ சிவக்குமார் மாமன்ற உறுப்பினர்கள் முறையாக பணிகளை மேற்கொள்வதில்லை; வார்டுகளுக்கு செல்வதில்லை என்று மக்கள் குற்றச்சாட்டை முன் வைப்பதாக தெரிவித்தார். இதனால் கடுப்பான மாமன்ற உறுப்பினர்கள் சிவகுமாரை பேச விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தன்னை பேசவிடவில்லை என்று கூறி, மாமன்ற கூட்டத்திலிருந்து எம்.எல்.ஏ வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















