கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
தமிழ்நாட்டையே உலுக்கிய கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது IG ரம்யா பாரதியின் பரிந்துரையின்பேரில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே மே 21-ம் தேதியன்று 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த வழக்கில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் பாரதிபுரத்தைச் சேர்ந்த மோகன்குமார் ஆகிய இருவரை சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் சூலூர் போலீஸார் கைது செய்தனர்.
அப்போது போலீஸிடமிருந்து தப்ப முயன்ற கார்த்திக், மாடியில் இருந்து குதித்ததில் கை, கால் முறிந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மோகன்குமார் நீதிமன்றக் காவலில் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், குற்றவாளிகள் இருவர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் போக்சோ (POCSO) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்னொருபக்கம், IG ரம்யா பாரதி சிறுமியின் வீட்டுக்கு நேரில் பெற்றோரை நேரில் சந்தித்து, காவல்துறை உங்களுடன் இருப்பதாக ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் எளிதில் ஜாமீனில் வெளியே வர முடியாதபடி ஓராண்டு சிறையில் அடைக்கும் வகையில் குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், கோவை மேற்கு மண்டல IG ரம்யா பாரதி, இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப் பிரத்யேகப் பரிந்துரைக் கடிதத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பினார்.
இந்தக் கடிதத்தை பரிசீலித்த கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், கார்த்திக் மற்றும் மோகன்குமார் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவின் நகல், கோவை மத்தியச் சிறை நிர்வாகம் மற்றும் கைதான இருவரிடமும் போலீஸார் மூலம் முறைப்படி வழங்கப்பட உள்ளது.
இந்தச் துரிதமாகச் செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்தது மட்டுமன்றி, அடுத்த சில தினங்களிலேயே அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வைத்த ஐ.ஜி ரம்யா பாரதி மற்றும் கோவை மாவட்ட காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையைப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















