ரயிலில் இந்த தவறுகளை செய்தால் அபராதம் மட்டுமல்ல.. சிறையும் காத்திருக்கிறது!
ரயில்வே விதிகளின்படி, ரயில்களுக்கு உள்ளேயும், குறிப்பிட்ட ரயில்வே வளாகங்களிலும் புகைபிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பொது நம்பிக்கை (திருத்தச்) சட்டம், 2026-இன் (Public Trust (Amendment) Act, 2026) கீழ் இந்திய ரயில்வே தனது விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. இனிவரும் காலங்களில் ரயில்கள் மற்றும் ரயில்வே வளாகங்களில் புகைபிடித்தல், அனுமதியின்றி வியாபாரம் செய்தல் மற்றும் பிச்சை எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது, ஒழுக்கத்தைப் பேணுவது மற்றும் விதிமீறல்களைக் குறைப்பதுமே இந்திய ரயில்வேயின் முக்கிய நோக்கமாகும்.
ரயில்வே விதிகளின்படி, ரயில்களுக்கு உள்ளேயும், குறிப்பிட்ட ரயில்வே வளாகங்களிலும் புகைபிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. புகைபிடித்து பிடிபடுபவர்களுக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமில்லாமல், ரயில்வே ஊழியர்கள் அந்தப் பயணியை ரயிலில் இருந்து இறக்கிவிடவும், அவர்களின் பயணச்சீட்டு அல்லது பாஸைப் பறிமுதல் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளனர். ஒருவேளை அபராதத் தொகை செலுத்தப்படாவிட்டால், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் ரூ. 2,000 முதல் ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கலாம்.ரயில்வே வளாகத்தில் சட்ட விரோதமாக வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராகவும் புதிய விதிகள் கடுமையான நடவடிக்கைகளை வழங்குகின்றன.
முறையான உரிமம் (License) இல்லாமல் பொருட்களை விற்பனை செய்பவர்கள் அல்லது ரயில் நிலைய வளாகத்தில் யாசகம் பெருவோர்கள் எவரேனும் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்தத் தவறினால் வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு அவர்களுக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, ரூ. 5,000 வரை அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம். புதிய சட்டத்தின்படி, மீண்டும் மீண்டும் இதே குற்றங்களைச் செய்பவர்களுக்கு இன்னும் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டு, நான்காவது முறையாக அல்லது அதற்கு மேல் குற்றவாளியாகக் கருதப்படுபவருக்கு 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ரயில்வே துறையின் உத்தரவுப்படி, பொது நம்பிக்கை (திருத்தச்) சட்டம், 2026-இன் கீழ் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு கீழ்ப்படிதலை அதிகரிக்கவும், ஒழுங்குமுறையை மேம்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
இத்தகைய கடுமையான அபராதங்கள் பயணிகளிடையே ஒழுக்கத்தை அதிகப்படுத்தும், பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றும் ரயில்வே வளாகத்தில் சிறந்த நிர்வாகத்தைப் பேண உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் இதுபோன்ற விதிமுறைகளைக் கடைபிடிப்பது பயணிகளின் பாதுகாப்புக்காகவே. அவற்றை பயணிகள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதேபோல, ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்துக்காக நிறைய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, ரயில்வே தொடர்பான முக்கியமான விதிமுறைகளை பயணிகள் அனைவரும் கடைபிடிப்பது நல்லது.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















