![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mayiladuthurai Leopard: மயிலாடுதுறையை கதிகலங்கும் வைக்கும் சிறுத்தை ரயில் ஏறி வந்ததா?
Mayiladuthurai Leopard News: மயிலாடுதுறையில் கடந்த ஒருவார காலமாக போக்கு காட்டும் சிறுத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
![Mayiladuthurai Leopard: மயிலாடுதுறையை கதிகலங்கும் வைக்கும் சிறுத்தை ரயில் ஏறி வந்ததா? Leopard Travelled to Mayiladuthurai By Train From Krishnagiri Latest News TNN Mayiladuthurai Leopard: மயிலாடுதுறையை கதிகலங்கும் வைக்கும் சிறுத்தை ரயில் ஏறி வந்ததா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/68a963ca20f7eb697301d8e1b2f18ea61712664111296113_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை வந்த சிறுத்தை.
கடந்த ஏப்ரல் 2-2024 அன்று மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஒருவார காலமாக சிறுத்தையை பிடிக்க எடுக்கப்பட்ட வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக வெவ்வேறு புலிகள் காப்பகங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறுத்தையை பிடிக்கும் கூண்டுகள் 16 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்க தானியங்கி சென்சார் கேமராகள் 49 பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டரில் சிறுத்தை நடமாட்டம்
இந்நிலையில் சிறுத்தை நேற்று முன்தினம் மயிலாடுதுறை நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்து குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் கிராமத்தில் சுற்றி திரிந்ததாக அப்பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து நேற்று அங்கு முகாமிட்ட வனத்துறையினர் 16 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும், ஆற்று ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினார். இந்த சூழலில் கடந்த இரண்டு தினங்களாக வனத்துறை வந்து பார்த்தபோது கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை. மேலும் தானியங்கி கண்காணிப்பு கேமராவை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் அதில் சிறுத்தையின் நடமாட்டம் தென்படவில்லை
அதே வேளையில் காஞ்சிவாய் கிராமத்தை அடுத்த பேராவூர் ஊராட்சியில் நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் சிறுத்தையை நேற்று முன்தினம் இரவு பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மசினகுடியில் டி23 புலியை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன் மற்றும் காலன் ஆகியோர் காஞ்சிவாய் ஊராட்சியை அடுத்த பேராவூர் ஊராட்சியில் சிறுத்தையின் கால் தடம் தென்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அங்கே கால்தடம் கிடைத்ததை அடுத்து வனத்துறையினர் அங்கு முகாம் ஈட்டுள்ளனர். மேற்கண்ட தகவல் மற்றும் கடந்த சில தினங்களாக சேகரித்த தகவல்கள் அடிப்படையில் காவேரி, பழைய காவேரி மற்றும் மஞ்சலாறு உட்பட்ட பகுதிகளின் நீர்வழிப் புதர்களிலேயே அச்சிறுத்தை இருக்கலாம் என்று அறியமுடிகிறது. அதற்கேற்றவாறு, கண்காணிப்பு குழுக்கள் தணிக்கை மேற்கொள்வதற்கும், கூண்டுகளை இடமாற்றம் செய்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர், மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் தேடுதல் பணி.
இதனிடையே மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களின் மயிலாடுதுறையை ஒட்டிய எல்லைப்பகுதிகளிலும் அந்த அந்த மாவட்ட வன பாதுகாவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கேயும் தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு சிறுத்தை இடம் பெயர்ந்ததா? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளதால் அம்மாவட்ட மக்கள் தற்போது அச்சத்தில் உறைந்துள்ளனர்.
மயிலாடுதுறையில் சிறுத்தை எப்படி?
மயிலாடுதுறை மாவட்டம் ஆனது, வயலும், வயல் சார்ந்த இடமும், கடற்பகுதியும் கொண்டது. இங்கு காட்டு விலங்குகள் வசிக்கும் அளவிலான சிறிய வகை காடுகள் கூட கிடையாது. மேலும் இது மலை சார்ந்த பகுதியும் அல்ல. அதுமட்டுமின்றி இம்மாவட்டத்தின் அருகில் கூட காடுகள் நிறைந்த மாவட்டம் என்பது கிடையாது. அப்படிபட்ட இந்த மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் என்பது கேட்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறுத்தை வருவதற்கான வாய்ப்புகள்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டங்களான திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகியவை மாவட்டங்கள் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரயில்கள் மூலம் தமிழகத்தின் சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
சந்தேகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஜவளகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இதில் கர்நாடக மாநில வனப்பகுதிகளான கோடிஹள்ளி, ஹாரஹள்ளி, ஆனேக்கல் உள்ளிட்ட காப்புக்காடுகளையொட்டி ஜவளகிரி வனச்சரகம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, புள்ளிமான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. இவைகள் கோடைக்காலங்களில் அங்கிருந்து வனவிலங்குகள் மற்ற வனப்பகுதிகளுக்கு இடம் பெயர்வது வழக்கம்.
மயிலாடுதுறையில் இருந்து சென்ற நெல் மூட்டைகள்
இந்நிலையில் தற்போது மயிலாடுதுறை சம்பா, தாளடி பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு அவைகள் அரவைக்காக சரக்கு ரயில் மூலம் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அனுப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இங்கிருந்து நெல் மூட்டைகளுடன் சென்ற சரக்கு ரயில் திரும்பும் வேளையில், சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் இருந்து சரக்கு ரயில் ஏறி சிறுத்தையானது மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வந்து இறங்கி இருக்கலாம் என பலரும் யூகிக்கின்றனர். குறிப்பாக முதல் முறையாக மயிலாடுதுறையில் சிறுத்தை தென்பட்ட இடமானது மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு அருகே என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நகைக்கடை உரிமையாளர் வளர்த்த சிறுத்தையா?
மயிலாடுதுறையில் முதல் நாள் சிறுத்தை தென்பட்ட பகுதியில் மயிலாடுதுறையை சேர்ந்த பிரபல நகைக்கடைகாரரின் வீடு அமைந்துள்ளது. அவருக்கு வன விலங்குகள் மீது ஆர்வம் உடையவர் என கூறப்படுகிறது. இந்த சூழலில் அவரின் ஆர்வ மிகுதியால் சிறுத்தையை யாருக்கும் தெரியாமல் வளர்த்து வந்திருக்கலாம் எனவும், அங்கிருந்து சிறுத்தை தப்பியுள்ளது எனவும் மயிலாடுதுறை மக்கள் இடையே பரவலாக பேசப்படுகிறது. மேலும் அவருக்கு பல ஏக்கரில் மயிலாடுதுறை அருகே தோட்டங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)