TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: கூட்டணி கட்சிகளுக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கியதை விட குறைவான தொகுதிகளை திமுக ஒதுக்கி வருவது, விசிகவிற்கு சாதகமாக அமையும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TN Election 2026: கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒதுக்கியதை காட்டிலும் விசிகவிற்கு இந்த முறை கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
வேகம் காட்டும் திமுக..
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி ஒரு சில தினங்களில், இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீட்டை பேசி முடிக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக கடந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தை தொடங்கி, காங்கிரஸ், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதிப் பங்கிட்டை இறுதி செய்துள்ளது. இன்னும் விசிக, கம்யூனிஸ்ட், தேமுதிக ஆகியவற்றுடன், சிறிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தை மட்டுமே முடிக்கப்பட வேண்டியுள்ளது. அதையும் அடுத்த ஓரிரு தினங்களில் முடிக்க திமுக மும்முரம் காட்டுகிறதாம். அதிலும், களத்தில் கட்சிகளின் செயல்பாடு அடிப்படையிலும், கடந்த தேர்தலின்போது செயல்பாடுகள் அடிப்படையிலுமே தொகுதிகளை ஒதுக்க முடியும் என திமுக கறாராக பேசி வருகிறதாம்.
திமுகவின் கஞ்சத்தனம்.. எஸ்கேப் ஆன காங்.,
திமுக கூட்டணியில் 21 கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில், பேச்சுவார்த்தை தொடங்கியபோதே, கடந்த தேர்தலில் ஒதுக்கியதை காட்டிலும், குறைந்த தொகுதிகளையே ஒதுக்க முடியும் என வலியுறுத்தியுள்ளது. ஆனாலும், காங்கிரஸ் மட்டும் முரண்டுபிடித்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு, 25 தொகுதிகளை பெற்றுள்ளது. அதாவது 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒதுக்கியதை காட்டிலும் 3 தொகுதிகளை கூடுதலாக காங்கிரஸ் பெற்றுள்ளது. அதேநேரம், இன்னபிற கட்சிகளுக்கு திமுக கரிசனம் காட்டவே விரும்பவில்லையாம். அதற்கு சான்றாகவே,
- கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு இந்த முறை 2 தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன
- கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் இந்த முறை 2 தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன
- 2021 சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவிற்கு 4 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன
- மனித நேய மக்கள் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட அதே இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன

5 கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில் 38 தொகுதிகளின் கணக்குகள் முடிந்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக மூன்று தொகுதிகளை ஒதுக்கினாலுமே, மற்ற கட்சிகளுக்கான தொகுதிகளை குறைத்து இழப்பை திமுக ஈடு செய்துள்ளது. இதுபோக மதிமுகவின் 3 தொகுதிகளிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கிய தலா 2 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளனர். இதன் மூலம் கூட்டணிக்கு ஒதுக்கிய 38 தொகுதிகளிலும் 7 தொகுதிகள் திமுக வசமே செல்கின்றன.
மற்ற கட்சிகளின் நிலை என்ன?
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறைந்தபட்சம் கடந்த தேர்தலில் வழங்கிய 6 தொகுதிகளையாவது மீண்டும் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாம்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிகபட்சம் 5 தொகுதிகள் வரை வழங்க திமுக முன்வந்துள்ளதாம்
- கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், அங்கும் உதயசூரியன் சின்னத்திலேயே வேட்பாளர்கள் களமிறக்கப்படலாம் என்றும் எதிபார்க்கப்படுகிறது
- தமிழக வாய்வுரிமை கட்சியின் வேல்முருகன், அனைத்து இந்திய ஃபார்வர்ட் ப்ளாக்கிற்கு மீண்டும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாம்
- தமிமுன் அன்சாரி, கருணாஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிட்டு வருகிறதாம்
- இதுபோக திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் சில சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கும் தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைக்க உள்ளதாம்
விசிக Vs தேமுதிக - யாருக்கு ஜாக்பாட்?
கடந்த சில வருடங்களாக திமுகவுடன் சேர்ந்து பயணித்து வரும் விசிக மற்றும் புதியதாக கூட்டணியில் இணைந்த தேமுதிக, ஆகிய இரண்டு கட்சிகளிலும் யாருக்கு இந்த முறை ஜாக்பாட் அடிக்கும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த கூட்டணியில் திமுகவிற்கு அடுத்தபடியாக களத்தில் தீவிரமாக வேலை செய்யும் கட்சியாக விசிக கருதப்படுகிறது. எனவே கடந்த தேர்தலில் ஒதுக்கிய 6 தொகுதிகளை காட்டிலும், கூடுதலாக சில தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், அது இரட்டை இலக்கை எட்டுவது சந்தேகமே என கூறப்படுகிறது. தேமுதிகவிற்கு ஏற்கனவே மாநிலங்களை எம்.பி., பதவி விட்டுக் கொடுக்கப்பட்ட நிலையில், சட்டமன்ற தேர்தலில் 7 முதல் 8 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.
திமுகவிற்கான தொகுதிகள் என்ன?
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக திமுக நேரடியாக சுமார் 154 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதுபோக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களையும் உதயசூரியன் சின்னத்திலேயே களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து இரண்டாவதுமுறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே, 0.3 சதவிகிதம் வாக்கு வங்கியை கொண்ட தேமுதிகவை கூட கூட்டணியில் இணைத்து, திமுக இந்த அளவிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.






















