![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Kumbakarai Falls: கும்பக்கரை அருவியில் 10 நாட்களுக்கு பிறகு சீரான நீர்வரத்து.. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் 10 நாட்களுக்கு பிறகு நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
![Kumbakarai Falls: கும்பக்கரை அருவியில் 10 நாட்களுக்கு பிறகு சீரான நீர்வரத்து.. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி! Tourists were allowed to bathe in Kumbakarai Falls after 10 days as the water flow stabilized. Kumbakarai Falls: கும்பக்கரை அருவியில் 10 நாட்களுக்கு பிறகு சீரான நீர்வரத்து.. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/22/41495c62b5ff61a6eef831615ee272bd1697950272777739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் இயற்கை எழில் கொஞ்சும் விதமாக கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலையில் இருந்தும், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தும் நீர்வரத்து ஏற்படுகிறது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்து குளித்துவிட்டு செல்கின்றனர்.
இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து அருவிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் தொடர்ந்து மழை பெய்ததால் கடந்த 10 நாட்களாகவே அருவியில் நீர்வரத்து குறையவில்லை.
இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கொடைக்கானலில் மழைப்பொழிவு குறைந்தது. இதையடுத்து கும்பக்கரை அருவியில் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். அருவியில் குளிக்க திடீரென்று அனுமதி அளிக்கப்பட்டதால் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. இருப்பினும் 10 நாட்களுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டனர்.
அதேவேளையில் அருவிக்கு வருகிற நீர்வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் வருகிற 3 நாட்களுக்கு கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அருவி பகுதியில் வனத்துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)