நேற்று சுப்புலட்சுமி, இன்று சரஸ்வதி.. தொடரும் சோகம்.. யானை இறப்பால் பக்தர்கள் கண்ணீர்
பழனியில் தனியாருக்கு சொந்தமான கோயில் யானை சரஸ்வதி உடல்நல குறைவால் இறந்ததால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில் யானை கஸ்தூரி மற்றும் தனியார் கோவிலுக்கு சொந்தமான சரஸ்வதி (67) என்ற இரண்டு பெண் யானைகள் பழனி பகுதிகளில் பக்தர்களுக்கு மிகவும் விருப்பமான யானைகள் ஆகும். இந்த நிலையில் தனியார் வன்னி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான வளாகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. சரஸ்வதி யானை கடந்த 6 மாதங்களாக எலும்பு தேய்மானம், மூட்டு பிரச்சனை, வயது மூப்பு காரணமாக காலில் காயங்களுடன் மற்றும் உடல் நலக்குறைவால் நடக்க முடியாமல் இருந்து வந்தது. யானையின் எடை சுமார் 2800 கிலோ மேல் உள்ளது.
அந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனச்சரக மருத்துவர்கள் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். யானைக்கு தேவையான மருந்துகள் மற்றும் அந்த யானையை உடற்பயிற்சி செய்ய ஏற்பாடுகள் என பல வகையில் அந்த யானையை உடல்நல குறைவிலிருந்து தேறி வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு 8.45 மணி அளவில் சரஸ்வதி யானையானது சிகிச்சை பலனின்றி உடல் நலக் குறைவால் உயிரிழந்தது. பழனி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வன்னி விநயாகர் கோவில் வளாகத்தில் இறுதி சடங்குகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஏராமான பொதுமக்கள் இறந்த சரஸ்வதி யானைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்போது பேசிய பெண்கள் தெரிவித்ததாவது,
சரசு... தங்க புள்ளை... என்று கூப்பிடவுடன் நின்று கொடுக்கும் உணவுகளை வாங்கி சாப்பிடும் இப்படி போய்ட்டியே என கண்ணீர் விட்டு கதறினார். உடுமலையில் இருந்து மாதம் மாதம் வரும்போதெல்லாம் சரஸ்வதி யானையை பார்க்காமல் செல்லமாட்டோம் பெண்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தெரிவத்த வனத்துறை மருத்துவர், யானைக்கு நோய் வாய்ப்பட்ட பின்பு உரிய மருத்துவம் கொடுக்கப்பட்டு உடன் தேறி வந்தது. தற்போது யானை திடீரென இறந்துள்ளது. தற்போது யானையின் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டால் மட்டுமே இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என்று தெரிவித்தனர்.