Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
சென்னை அம்பத்தூரில் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்த பெண் உதவி ஆய்வாளர் 2 மகன்களை தவிக்கவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தோணி மாதா. 31 வயதான இவர் சென்னை அம்பத்தூரில் சட்டம் - ஒழுங்கு காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கணவரைப் பிரிந்து வாழும் இவர் அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தனது 10 வயது மற்றும் 8 வயதுள்ள 2 மகன்களுடன் வசித்து வந்தார்.
பெண் எஸ்ஐ தற்கொலை:
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்தோணிமாதாவை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது நீண்ட நேரமாகியும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால், அவர் வீட்டிற்குச் சென்றபோது வீடு உள்பக்கம் பூட்டியிருந்துள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கிட்டு அந்தோணிமாதா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து, அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்தோணி மாதாவின் தற்கொலைக்கான காரணமும் வெளியாகியுள்ளளது. அந்தோணி மாதாவிற்கு கடந்த 2015ம் ஆண்டு யோவான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
என்ன காரணம்?
அந்தோணி மாதாவிற்கு கடந்த சில மாதங்களாக உடன் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அந்த உதவி ஆய்வாளர் அந்தோணி மாதாவிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த அந்தோணி மாதா தன்னைப் பார்க்க வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என அடிக்கடி மிரட்டி வந்துள்ளார்.
இதனால், அந்த உதவி ஆய்வாளர் அவரை தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த உதவி ஆய்வாளருக்கு வீடியோ கால் மூலம் அழைப்பு விடுத்த அந்தோணி மாதா தன்னைப் பார்க்க வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார். வழக்கம்போல தனக்கு மிரட்டல் விடுப்பதாக கூறி அந்த காவல் உதவி ஆய்வாளர் அழைப்பைத் துண்டித்துள்ளார்.
பரிதாபம்:
அதன்பின்பு, அந்தோணி மாதாவிற்கு அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் எடுக்காத நிலையில் அவருக்கு சந்தேகம் அடைந்துள்ளது. இதையடுத்து, நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து நேரில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவருடைய நண்பர்கள் நேரில் சென்று பார்த்தபோது கதவு பூட்டியிருந்துள்ளது. உள்ளே சென்று கதவை உடைத்து பார்த்தபோது அந்தோணி மாதா சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார்.
தந்தையைப் பிரிந்து தாயுடன் வசித்து வந்த 2 மகன்களும் தற்போது தாயையும் இழந்திருக்கும் சோகம் அப்பகுதியில் மிகப்பெரிய வேதனையை உண்டாக்கியுள்ளது.





















