மேலும் அறிய
சிவகங்கையில் 359 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு: அறியப்படாத ரகசியம்!
காளையார்கோவில் அருகே சுமார் 359 ஆண்டுகள் பழமையான வாமன உருவம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாமன உருவம் பொறித்த கல்வெட்டு
Source : whats app
வாமன கோட்டுருவமும் - கல்வெட்டும்
சிவகங்கை: காளையார்கோவில் வட்டம் கொல்லங்குடியை அடுத்த வீரமுத்துப்பட்டி செங்குளி வயலில் பழமையான எழுத்துகள் உள்ள கல்வெட்டும் அதே கல்லில் வாமன கோட்டுருவமும் வரையப்பெற்றுள்ளது. இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா தெரிவித்ததாவது. இக்கல்வெட்டு சுமார் 359ஆண்டுகள் பழமையான வாமன உருவம் பொறித்த கல்வெட்டு, அந்த கல்லின் ஒருபக்கத்தில் ஒருகையில் விரித்த குடை ,மற்றொரு கையில் கெண்டி எனும் கமண்டலம் உள்ளது. மேலும் தலையின் பின்பகுதியில் கொண்டையும், மார்பில் முப்புரி நூலுடன் வாமன உருவம் காணப்படுகிறது. அரசர்கள் ஆண்ட காலத்தில் நிலம் தொடர்பான ஆவணங்கள் வழங்கும் போது, இறைவனுக்கானது என்பதை அடையாளப்படுத்துவதற்காக வடிக்கப்பெற்றுள்ளது.
கல்வெட்டு
கல்லின் இரண்டு பக்கங்களிலும் கல்வெட்டு எழுத்து காணப்படுகிறது. அதில் முதல் பக்கத்தில் 16 வரிகள் உள்ளன. அதில் ஸ்வஸ்தி ஸ்ரீசகாத்தம் 1588 பிங்களஆண்டு கார்த்திகை 2-ல் வரணையில் கீழசெங்குளி, மேலசெங்குளி, முனிபட்டையருக்குலடி ஊருணிக்குமேற்கு செவுரிக்கு வடக்கு கண்டி அய்யனுக்கு கிழக்கு பசுகெடைப் பொட்டலுக்குத் தெற்கு ஸ்ரீதி (இதில் 6, 7, 8-ம்வரிகளில் இறுதி எழுத்துகள் சிதைந்துள்ளன). இரண்டாம் பக்கத்தில் 6 வரிகள் உள்ளன. அதில், திருமலை சேதுபதி காத்த தேவர்க்குகானம் காளிசுரர் உடையாருக்கு இட்ட ”பிரமதாயம்.உ” என்று உள்ளது. இராமநாதபுரம் இரகுநாதசேதுபதி என்ற திருமலைசேதுபதி, காளையார்கோவில் காளீஸ்வரருக்கு வழங்கிய நிலம் குறித்த பிரமதாயம். இதன் எல்லை கீழசெங்குளி, மேலசெங்குளி முனிபட்டையருக்கு அடிஊருணிக்கு மேற்கு, செவுரிக்கண்மாய்க்கு வடக்குகண்டிப்பட்டி அய்யனாருக்கு கிழக்கு, பசுகெடைப்பொட்டலுக்கு தெற்கு. இதில் காட்டப்பட்டுள்ள ஊருணி தற்போது காணப்படவில்லை. மற்றவை மாறுபாடில்லாமல் உள்ளன.
அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்து பாதுகாக்க ஏற்பாடுகளை செய்யப்படுகிறது
இரகுநாதசேதுபதி 1645 முதல் 1676 வரை ஆட்சி செய்துள்ளார். இவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுள் புகழ்பெற்ற கிழவன் சேதுபதிக்கு முந்தைய மன்னராவார். இவர் மதுரையை ஆண்ட திருமலைநாயக்கரிடம் இணக்கமாக இருந்ததோடு போர் உதவிகள் புரிந்துள்ளார். ஆகவே இவர் திருமலை சேதுபதி என அழைக்கப்பெற்றுள்ளார். அரசர்கள் பொதுவாக ஆவணங்கள் வழங்கும் போது கல்லிலும், செம்பிலும் வெட்டி கொடுப்பது மரபு. இக்கல்வெட்டு வழங்கப்பட்ட காலம் கி. பி 1666, இது தொடர்பான செப்பேடு கிடைத்ததாக தெரியவில்லை. இனிவரும் காலங்களில் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இக்கல்வெட்டு ஆறு ஆண்டுகளுக்கு முன்னாள் சிவகங்கை தொல்நடைக்குழுவால் அடையாளப்படுத்தப்பட்டது. இதனை பாதுகாக்கும் பொருட்டு தற்போது சிவகங்கை தொல் நடைக்குழு சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்து பாதுகாக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















