Parliament Session: சரமாரியாக விமர்சித்த பிரதமர் மோடி! வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்!
மக்களவையில் பிரதமர் மோடி சரமாரியாக விமர்சித்ததை கண்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் பிரதமர் மோடி இன்று மக்களவையில் பேசினார்.
சரமாரியாக விமர்சித்த பிரதமர் மோடி:
மக்களவையில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மிக கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி தனது பேச்சில், எதிர்க்கட்சியினர் மக்களவைக்கு பதில் மாநிலங்களவைக்கு செல்ல விரும்புவதாக கேள்விப்பட்டதாகவும், காங்கிரஸ் தன்னை ஆட்சியாளர்களாகவும், பொதுமக்களை குறைந்தவர்களாக கருதுவதாகவும், காங்கிரஸ் கனவு காணும் திறனை கூட இழந்துவிட்டதாகவும், வரும் தேர்தலில் 400 தொகுதியில் வெற்றி பெறும் எனவும் பிரதமர் மோடி பேசினார்.
வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்:
பிரதமர் மோடியின் பேச்சை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். பிரதமர் மோடியின் இந்த கடும் விமர்சனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் இதுதொடர்பாக கூறிய கருத்தில், “ பிரதமர் மோடி மீண்டும் அதே பேச்சையே திரும்ப திரும்ப பேசி வருகிறார். அவர் சோர்வடைவாரா? மாட்டாரா? என்பது எனக்கு புரியவில்லை. பிரதமரின் பேச்சை மதிக்கிறோம். ஆனால், இன்று அது கீழானதாக இருந்தது. நேருஜி 60 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால், அவரைப் பற்றி இன்று பேசுகிறார். பிரதமர் மோடிக்கு என்னாச்சு?” என்று கூறினார்.
பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதில் கூறிய மார்க்சிஸ்ட் எம்.பி. ஜான் ப்ரிட்டாஸ், இந்த நாட்டில் அனைவருக்கும் கனவு காண உரிமை உள்ளது. பிரதமர் மோடிக்கும் 400 தொகுதிகள் என்று கனவு காண உரிமை உள்ளது என்றார். கம்யூனிஸ்ட் எம்.பி. பினய்விஸ்வம், மோடி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இதை பார்ப்பார் என்றார்.
3-வது ஆட்சியில் 3-வது மிகப்பெரிய பொருளாதாரம்:
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், எதிர்க்கட்சியை சரமாரியாக விமர்சித்து பிரதமர் மோடி பேசியிருப்பதும், அடுத்த 1000 ஆண்டுகளுக்கான அடித்தள திட்டங்களை உருவாக்குவோம் என்று பிரதமர் பேசியிருப்பதும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், பிரதமர் மோடி தனது உரையில் தற்போது இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது என்றும், பா.ஜ.க.வின் 3வது ஆட்சியில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க: நாட்டுக்கு நல்ல எதிர்க்கட்சி தேவை: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!
மேலும் படிக்க: Election Campaign: ”தேர்தல் பரப்புரையில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது”...அரசயில் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

