LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் திடீர் மாற்றம்.. கடுப்பாகும் மக்கள்.. இதுக்கு தீர்வே இல்லையா?
நிலைமை சீராகும் வரை 1 மாதத்திற்கு வணிகப் பிரிவுகளுக்கு உயிரி எரிபொருள், நிலக்கரி மற்றும் மண்ணெண்ணெய் பயன்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஹோர்முஸ் நீர்வழிப்பாதை மூலம் எரிவாயு நிரப்பப்பட்ட கப்பல்களை அனுமதிக்க ஈரான் மறுத்தது. இதன் காரணமாக ஆசிய நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உண்டாகியுள்ளது. குறீப்பாக இந்தியாவில் வணிக சிலிண்டர் விநியோகத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனினும் நிலைமையை சீராக்க மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு உண்டாகலாம் என சொல்லப்படுவதால் பங்குகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். ஆனால் பெட்ரோல், டீசல், வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் சிலிண்டர் ஆகியவை போதுமான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனினும் வணிக சிலிண்டர் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி நிலைமை சரி செய்யப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “சமையல் எரிவாயு உற்பத்தி 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்து முன்கூட்டியே வாங்கி வைக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தனர்.
மேலும் இந்தியா தனது எல்பிஜி தேவையில் 60 சதவீதத்தை வெளிநாட்டிலிருந்து பெற்று வந்தது. அதில் 90 சதவீதம் ஹார்முஸ் பாதை வழியாக வந்தது. இந்த பகுதி போரால் மூடப்பட்டதால் தட்டுப்பாடு நிலவியது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டது. அதன்மூலம் வழக்கத்தை விட உற்பத்தி அதிகரித்துள்ளது. அனைவரையும் சிலிண்டர் சென்றடையும் வகையில் மறு முன்பதிவு 21 முதல் 25 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் விதிவிலக்காக கிராமப்புற நுகர்வோருக்கான எல்பிஜி முன்பதிவு மறு முன்பதிவு 45 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அச்சம் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்பதிவு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டர்களை தயாரிக்கும். அதனை தங்கள் பகுதியில் உள்ள நுகர்வோரை மாநில அரசுகள் தீர்மானித்து முன்னுரிமை அளித்து வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பிரச்னையை தீர்க்க மாநிலங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1 லட்சம் கிலோலிட்டர் மண்ணெண்ணெய் அளவுடன் கூடுதலாக 48,000 கிலோ லிட்டர் வழங்கப்படும். நிலைமை சீராகும் வரை 1 மாதத்திற்கு வணிகப் பிரிவுகளுக்கு உயிரி எரிபொருள், நிலக்கரி மற்றும் மண்ணெண்ணெய் பயன்படுத்த அனுமதிக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சகம் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்தியுள்ளது என கூறப்பட்டுள்ளது.























