Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
திமுகவை அழிக்க வேண்டும் என சொல்கிறார்கள். இதையெல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் அழியாமல் இருப்பதற்கு என்ன வழி என்பதை முதலில் யோசியுங்கள் என வடிவேலு கூறியுள்ளார்.

எந்த நெருக்கடியையும் சந்திக்கும் தைரியம், தன்னம்பிக்கை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உள்ளது என நடிகரும், திமுக ஆதரவாளருமான வடிவேலு தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, “முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் நான் பேச வந்திருப்பது ரொம்ப பெருமையா இருக்கிறது. அவருக்கு 73 வயது ஆகிறது என சொன்னாலும் முதல்வரின் செயல்பாடு 37 வயதானவர் போல தான் தெரிகிறது. அவரைப் போல ஒரு தலைவர், முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு கிடைப்பது ரொம்ப கஷ்டம்.
கடந்த 2 நாட்களாக சாப்பாடு விஷயத்தில் பீதி கிளப்பி விட்டார்கள். கொரோனா காலம் போல வரப்போகிறது. டீசல், பெட்ரோல் நிலையங்களில் கூட்டத்தைப் பார்த்தால் எனக்கு குலைநடுங்கி விட்டது. திமுகவை அழிக்க வேண்டும் என சொல்கிறார்கள். இதையெல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் அழியாமல் இருப்பதற்கு என்ன வழி என்பதை முதலில் யோசியுங்கள். திமுகவை அழிக்க வேண்டும் என சொன்னவர்கள் எல்லாரும் காணாமல் போய்விட்டார்கள். திமுக ஒரு சாதாரண சாம்ராஜ்யம் கிடையாது. அதைப்பற்றி சொல்ல எந்த கட்சியிலும் எதுவும் கிடையாது.
சமீபத்தில் ரூ.5 ஆயிரம் அனைவரின் அக்கவுண்டிலும் தமிழ்நாடு அரசு வரவு வைத்தது. அதிகாலையில் இந்த தொகை வந்த நிலையில் திமுகவை அழிக்க வேண்டும் என சொன்னவர்கள் கூட அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். இதைவிட நிறைய விஷயங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செய்யப் போகிறார். அவர் சாதாரண ஆள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பேச வேண்டிய வசனம் எல்லாம் மேடையில் மட்டும் தான் பேச முடியும். ஆனால் செயல்பாடுகள் இருக்கும் ஒரே கட்சி திமுக தான்.
திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும். வேறு யாரு வந்தாலும் நம்ம போட்ட திட்டங்கள் அனைத்தும் காலியாகி விடும். தமிழ்நாடு என்ற பெயரே காணாமல் போய்விடும். ஏனெனில் தட்டிக்கேட்க எதிர்க்கட்சி பக்கத்தில் யாருமே இல்லை. எந்த நெருக்கடியையும் சந்திக்கும் தைரியம், தன்னம்பிக்கை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உள்ளது. அவர் ஒரு ஆள் இருப்பதால் தான் தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பாக உள்ளது. மகளிர்,குழந்தைகளுக்கு பாதுகாப்பு உள்ளது. இந்த கட்சி மட்டும் இல்லையென்றால் என் தாய் மீது ஆணையாக சொல்கிறேன் நமக்கு கேடு காலமாக மாறிவிடும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களுக்கு மேலாக நாம் ஜெயிப்போம். இந்த நிகழ்ச்சி முதலமைச்சர் பிறந்தநாள் விழா இல்லை. 2026ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வரப்போவதற்கு பரிசாக கொடுக்கப்போகிற விழாவாகும். நான் இப்போதே வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்து மக்கள் செழித்து வாழ்வார்கள். மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சர். இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.























